புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள பெட்டிர் ரோடடு புளோக் 216 அருகே உள்ள கார் நிறுத்துமிடத்தில் ஒரு காரில் தீப்பிடித்துக்கொண்டதில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) அதிகாலையில் சம்பவம் நடந்தது. தூங்கிக் கொண்டிருந்த சிலர், கீழே இறங்கி என்ன நடக்கிறது என்று பார்க்க வந்துவிட்டனர்.
புளோக் 216ன் இரண்டாம் மாடியில் வசித்த திருவாட்டி காசிடா யூசூஃப் அவர்களில் ஒருவர்.
“சன்னல் முழுவதும் தீக்கொழுந்துகள் தெரிந்தன. தீயின் வெப்பத்தை என்னால் உணர முடிந்தது,” என்றார் அவர்.
அவர் கீழே சென்றபோது ஆரஞ்சு தீக்கொழுந்துகள் காரைச் சூழ்ந்திருந்தது. தீப்பிழம்புகள் தங்கள் மீது பட்டுவிடுமோ என்ற பயத்தில் பலரும் தூரத்தில் நின்றனர்.
ஆனால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஏற்கெனவே அங்கு வந்துவிட்டது. அதற்கு அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் பற்றி தகவல் கிடைத்தது.
குப்புறக் கிடந்த காயமுற்ற ஆடவர் வலியால் துடிக்க, குடிமைத் தற்காப்புப் படையினர் அவருக்கு மருத்துவ உதவி செய்தனர்.
அவர் காரின் ஓட்டுநர் என்று நம்பப்படுவதாக ஷின் மின் செய்தித்தாள் கூறியது. காரின் விசையை முடுக்கிவிட்டபோதும் கார் செயல்படத் தொடங்கவில்லை.
அப்போது திடீரென்று கார் தீப்பிடித்துக் கொண்டதாக ஷின் மின் கூறியது.
தீச்சம்பவத்தில் அருகில் இருந்த இரண்டு கார்களும் ஒரு வேனும் மிகவும் சேதம் அடைந்தன.
நான்கு காற்றழுத்த நுரை தெளிப்பான்களைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படைப் பேச்சாளர் கூறினார்.
காயம் அடைந்த ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தீக்காண காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.