மரத்துண்டால் அடிபட்ட ஓர் ஊழியர் கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் மாண்டார். அதன்மூலம், இந்த ஆண்டு வேலையிடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.
மாண்டவர் 51 வயது சிங்கப்பூர் ஆடவர். நிலத்தூண் தாங்கக்கூடிய எடையைப் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது அதில் பயன்படுத்தப்பட்ட பிளைவுட் மரத்தின் ஒரு பகுதி உடைந்து பறந்து ஆடவர் மீது பட்டதில் அவர் காயம் அடைந்தார்.
கடந்த ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணி அளவில் பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் விபத்து நடந்ததாக மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
ஆடவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் காயம் காரணமாக ஒரு வாரம் கழித்து இறந்தார்.
இந்தச் சம்பவத்தை மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனமான பிபிஆர் பைலிங்கிடம் துளையிட்டு கட்டட அடித்தளம் அமைக்கும் பணியை நிறுத்தும்படி அது உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு அதிகமான வேலையிட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. மே மாதத்தில் வேலைகளை நிறுத்தி பாதுகாப்பை மறுஆய்வு செய்யும்படி நிறுவனங் கள் வற்புறுத்தப்பட்டன.