சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வேலை தொடர்பில் 31 மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஊழியர்கள் பற்றியும் வேலை யிடப் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
மன்றத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பிலான ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று அடுத்த வாரம் தாக்கலாகும். ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங், அந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்துவார்.
மேலும் பல விபத்துகள் நிகழ்வதைத் தடுக்கும் நோக்கத்தில் வேலையிடப் பாதுகாப்பு பிரச்சினை பற்றி உடனடியாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவி தலைமைச் செயலாளருமான திரு வோங் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
வேலையிடப் பாதுகாப்பும் ஊழியர்களின் உடல் நலமும் முதலாளிகள், ஊழியர்கள் இருவரின் ஒட்டுமொத்த பொறுப்பாகும் என்பதை மறுபடியும் நினைவுபடுத்த தான் விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
நாடாளுமன்றக் கூட்ட நிறைவின்போது உறுப்பினர் 20 நிமிடம் பேசுவதற்கு அந்த ஒத்திவைப்புத் தீர்மானம் அனுமதி வழங்கும். அந்தத் தீர்மானம் திங்கட்கிழமை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தின் முடிவில் ஒத்திவைப்புத் தீர்மானத்தைத் தாக்கல் செய்ய ஒரே ஓர் உறுப்பினருக்கு மட்டும்தான் அனுமதி கிடைக்கும்.
சீட்டு குலுக்கின் மூலம் திரு யோங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விவாதிக்கப்படும் அம்சத்திற்குப் பொறுப்பான அமைச்சர், திரு யோங் பேசிய பிறகு 10 நிமிடம் வரை விளக்கம் அளிக்கக்கூடும்.
சிங்கப்பூரில் சென்ற வாரம் வரை 31 வேலையிட மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
2020ஆம் ஆண்டு முழுவதுமே 30 வேலையிட மரணங்கள்தான் நிகழ்ந்தன. சென்ற ஆண்டு முழுவதற்கும் அத்தகைய மரணங்களின் எண்ணிக்கை 37ஆக இருந்தது.
ஆகக் கடைசியாக இம்மாதம் 20ஆம் தேதி 55 வயது சிங்கப்பூரர் ஒருவர் மாண்டார்.
புலாவ் பிரானியில் இருக்கும் காவல்துறையின் கடலோரக் காவல்படை தலைமையகத்தில் ஒரு படகில் இருந்து விழுந்து அந்தச் சிங்கப்பூரர் மாண்டுவிட்டார்.
அவர், அந்தப் படகின் மோட்டார் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் மட்டுமே அந்தப் படகில் இருந்தார்.
இதனிடையே, கடல்துறை நிறுவனங்களும் ஊழியர்களும் கடலோர தொழில்துறையினரும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாகவே வேலை இடத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி மதிப்பிட வேண்டும் என்பதையும் திரு யோங் நினைவுபடுத்தினார்.
பருவநிலைக்கு ஏற்ப மாற்றுத் திட்டங்களை அவர்கள் தீட்டி வைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
"ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஊழியரும் வேலையை முடித்து பாதுகாப்பாக வீடு திரும்பி தங்கள் அன்பர்களுடன் மகிழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக பாடுபட்டு வேலையிடப் பாதுகாப்பு மற்றும் ஊழியர் நல நடைமுறைகளை மேம்படுத்துவோம்," என அவர் தெரிவித்தார்.