மற்ற வயது சிறார்களைக் காட்டிலும் ஐந்துக்கும் குறைந்த வயதுடைய சிறார்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றும் அதனால் கடும் நோய் பாதிப்பும் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று கூறினார்.
தடுப்பூசிப் பாதுகாப்பு இன்னும் கிடைக்காத நிலையில் ஐந்துக்கும் குறைந்த வயதுடைய பிரிவினர் இருப்பதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டினார். இவ்வாண்டின் இறுதி காலாண்டில் இவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார அமைச்சு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இக்குறிப்பிட்ட பிரிவினருக்கான தடுப்பூசி சாத்தியம் குறித்து ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள தரவுகளை சுகாதார அறிவியல் ஆணையம் மறுஆய்வு செய்துவருவதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் முதியவர் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் சிறார் எண்ணிக்கை குறைவே என்றும் அமைச்சர் ஜனில் வலியுறுத்தினார்.
அண்மையில் கொரோனா கிருமி பாதிப்பால் உயிரிழந்த இரு இளம் பிள்ளைகளைப் பற்றிய செய்தி தமக்குக் கவலையளித்ததாகக் கூறிய டாக்டர் ஜனில், பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், 5 முதல் 11 வயதுடைய பிள்ளைகளுக்கு ஒரு கட்டத்தில் மூன்றாவது எம்ஆர்என்ஏ தடுப்பூசி தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏறத்தாழ இரு மாதங்களில் இந்தப் பிரிவினருக்குக் கூடுதல் தடுப்பூசிகள் போடுவதற்கு அமைச்சு தயாராகி வருவதாகவும் அவர் சொன்னார்.
மீண்டும் கொவிட்-19 தொற்றுவது குறித்து அமைச்சர் ஓங்
இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படாத ஒருவருடன் ஒப்பிடுகையில் நான்கிலிருந்து ஏழு மாதங்களுக்கு முன் தொற்றுக்கு ஆளாகியவருக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் 3% மட்டுமே என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் கிருமி திரிபுகளால் மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த மூன்று மாதங்களில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் கொவிட்-19 ஏற்படுவதும் அரிதான ஒன்று என்றார் அவர்.
இருப்பினும் முன்னால் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதில் ஏற்பட்ட பாதுகாப்புத் தன்மை, நாளடைவில் குறையும் என்பதை உணர்ந்து கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டதால் பாதுகாப்பு தேவையில்லை என நினைத்துவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
தினமும் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையில் தொற்றுக்கு மீண்டும் ஆளாவோரின் எண்ணிக்கையையும் சுகாதார அமைச்சு சேர்க்கவேண்டும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மருத்துவக் காரணத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தகுதிபெறாதவர்கள், ஆஸ்ட்ராஸெனகா கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு சுகாதார அறிவியல் ஆணையம் அதன் ஒப்புதலை அளித்துள்ளது. சிங்கப்பூர்வாசிகளில் 7 விழுக்காட்டினர் இன்னும் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
2021ன் கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம்
கொவிட்-19 கிருமித்தொற்றால் கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் மாற்றம் உள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை வெளியிட்டது. பிறப்பு, இறப்பு பதிவகம் அதன் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் மேலும் சில உயிரிழப்புகளை அமைச்சு முன்னதாக இருந்த எண்ணிக்கையில் சேர்த்துள்ளது. சுகாதார அமைச்சிடம் தெரிவிக்கப்படாத மரணங்களும் இதில் அடங்கும்.