சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தியும் ஓமிக்ரான் ரகக் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் நீண்டகால கொவிட் அறிகுறிகள் எனும் சிக்கலை எதிர்நோக்கும் சாத்தியம் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் ஆய்வுக் கட்டமைப்புத் தலைவரான டாக்டர் பர்னபி யங் இவ்வாறு கூறினார்.
கிருமித்தொற்றிலிருந்து குணமாகிப் பல மாதங்கள் சென்ற நிலையிலும் நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அது நீண்டகால கொவிட் பாதிப்பு என வகைப்படுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் ஓமிக்ரான் ரக கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடையே நீண்டகால கொவிட் பாதிப்பின் தீவிரம் குறைவாகக் காணப்பட்டதாகவும் குறுகிய காலமே அது நீடித்ததாகவும் டாக்டர் யங் குறிப்பிட்டார்.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் இங்குள்ள நோயாளிகளைக் கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில் இவ்வாறு கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
நீண்டகால கொவிட் பாதிப்பைக் கண்டறியவோ அதனைக் குணப்படுத்தவோ குறிப்பிட்ட நடைமுறை அல்லது சிகிச்சைமுறை தற்போது இல்லை என்பதை டாக்டர் யங் சுட்டினார்.
இருப்பினும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான மருந்துகள் உள்ளன; மற்ற நோய்களால் அந்த அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 நோயாளிகளில் எட்டில் ஒருவருக்கு நீண்டகால கொவிட் பாதிப்பு ஏற்படுவதாக அண்மையில் லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவைத் தொடர்ந்து அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
நெதர்லாந்து ஆய்வாளர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர். நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி போன்றவை மட்டுமன்றி தலை வலி, கண்களில் அரிப்பு, மயக்கம், முதுகு வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் பல மாதங்களுக்கு நீடிப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
சென்ற வாரம், சிங்கப்பூர் ஆய்வுக் குழு லேன்செட் சஞ்சிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய ஐந்து விழுக்காட்டினருக்கு நீண்டகால கொவிட் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர்களின் நுகரும் திறனோ சுவையுணர்ச்சியோ பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.