தீபாவளியையொட்டி குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் உணவு பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக அளித்துள்ளது மெக்டோனல்ட்ஸ். சுமார் 750 பேருக்கு 3,000 வேளைகளுக்கான உணவுப் பற்றுச்சீட்டுக்களை சிண்டாவின் 'புரோஜெக்ட் கிவ்' திட்டத்துக்கான இடத்தில் மெக்டோனல்ட்ஸ் நேற்று அளித்தது.
பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அதன் எல்லா கிளைகளிலும் 'சிக்கன் மெக்கிரிஸ்பி எக்ஸ்ட்ரா வேல்யூ மீல்ஸ்'களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சிறு உதவியின்மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு தீபாவளியைக் கொண்டாடும் குதூகலம் கிடைக்கும் என்று தான் நம்புவதாக மெக்டோனல்ட்ஸின் நிர்வாகி திரு பெஞ்சமின் போ கூறினார். பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் சிண்டாவுடன் சேர்ந்து, இவ்வாண்டு சமூகத்துக்குப் பங்களிப்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மெக்டோனல்ட்ஸ் சிங்கப்பூரின் வர்த்தக நிர்வாகி ரெஜித் கோபி பற்றுச்சீட்டுகளைக் கொடுக்க, அவற்றை வாங்கிக்கொண்ட சிண்டாவின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன், தீபாவளிக் காலத்தில் குடும்ப உறவுகளை வலுப்படுத்த மெக்டோனல்ட்ஸின் உணவு நன்கொடை உதவும் என்றார். சமூகத்துக்கு உதவுவதில் மெக்டோனல்ட்ஸ், சிண்டா ஆகியவற்றின் கூட்டு முயற்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேவைப்படுவோருக்கு ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவதன் முக்கியத்துவத்தை இவ்வாறு இணைந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஷ்ணு வர்தினி