நவம்பர் 20, 1972. அன்று காலை வானொலி கேட்டுக்கொண்டிருந்த திரு சிவலிங்கம் சுந்தரேசனுக்கு திடுக்கிடும் செய்தி கிடைத்தது. ராஃபிள்ஸ் பிளேசில் அமைந்திருந்த ராபின்சன்ஸ் கடைத்தொகுதியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த அவர் அவ்விடத்துக்கு விரைந்தார்.
அவருடைய மூத்த சகோதரரான 33 வயது திரு சிவசுந்தரம் சுந்தேரசன் அந்தக் கடைத்தொகுதியில் மின்தூக்கிப் பணியாளராக வேலை பார்த்துகொண்டிருந்தார்.
அண்ணனைத் தேடி சென்ற திரு சிவலிங்கம் சம்பவ இடத்தில் மாலை 5 மணி வரைக்கும் காத்துகொண்டிருந்தார். தன்னுடைய அண்ணன் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
“நான் கடைத்தொகுதிக்கு வெளியே பல மணிநேரம் காத்திருந்தேன். எப்படியாவது என் சகோதரர் வீடு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன்,” என்று அன்று நடந்ததை நினைவுகூர்ந்தார் 79 வயதான திரு சிவலிங்கம். “அடுத்த நாள் நிருபர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து என் சகோதரர் பற்றி கேள்வி கேட்டனர். அவர் தீயில் மடிந்தது அவர்கள் சொல்லிதான் எனக்கு தெரியவந்தது.”
சில நாள்கள் கழித்து, திரு சிவசுந்தரத்தின் உடமைகளைப் பெற்றுகொள்ள திரு சிவலிங்கம் அப்போதுள்ள ஊட்ரம் ரோடு பொது மருத்துவமனைக்குச் சென்றார் (தற்போதுள்ள சிங்கப்பூர் பொது மருத்துவமனை). தீயில் மடிந்த திரு சிவசுந்தரத்தின் இடுப்பு எலும்பு மட்டும்தான் மிஞ்சியது. சம்பவம் நடந்தபோது அவர் அணிந்திருந்த சீகோ கைக்கடிகாரம் கருகிய நிலையில் திரு சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணனின் நினைவாக இன்று அந்தக் கைக்கடிகாரம் மட்டுமே இன்னும் உள்ளது.
“அந்த கடிகாரத்தை என்னால் பல வேளைகளில் பார்க்கக்கூட முடியாது. அன்று என் அண்ணனும் மற்றவர்களும் பட்ட வேதனையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.”
மாண்ட திரு சிவசுந்தரத்திற்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.
அன்று மூண்ட தீயில் மொத்தம் ஒன்பது பேர் மாண்டனர். தீயால் மின்சாரம் தடைப்பட்டதால் மின்தூக்கிகளில் சிக்கிக்கொண்டவர்கள் அனைவரும் மாண்டனர்.
காலை சுமார் 9.50 மணியளவில் தீ மூண்டதாக விசாரணைக் குழுவின் முடிவுகள் தெரிவித்தன. மின்சாரக் கம்பிகள் முதலில் வெடித்ததாகவும் இதனைத் தொடர்ந்து தீ வேகமாக பரவியதாகவும் அந்தக் கடைத்தொகுதியில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர். கடைத்தொகுதியின் அடித்தளத்தில் அமைந்திருந்த வாகனம் நிறுத்துமிடம் வழியாக சிலர் தப்பி ஓடினர்.
தீயை அணைக்க 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
“அன்று உயிரிழந்தவர்கள் தீயில் கருகி மாண்டனர். அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் திரு சிவலிங்கம்.