வகுப்பறைக்கு அப்பால் தமிழ்மொழி கற்றலை ஊக்குவித்து, சிங்கப்பூர் குறித்த புரிதலை மேம்படுத்தியது, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ‘தமிழில் ஒரு சுற்றுலா’ நிகழ்ச்சி. இம்மாதம் 24ஆம் தேதி, நிப்பான் மீன் பண்ணை, ஐ.டி. மெங் தோட்டம், சிங்கப்பூர் நகரக் காட்சிக்கூடம் என மூன்று இடங்களைச் சுற்றிப்பார்த்தனர் மாணவர்கள்.
‘த திங்கர்ஸ்’ கற்றல் நிலையமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 25 தொடக்கப் பள்ளிகளின் 60க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வோர் இடத்தின் சிறப்புகளையும் அறிந்துகொண்டதோடு இடத்துக்கேற்ற புதிய தமிழ்ச் சொற்களை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
இயற்கை, சுற்றுச்சூழல், மீன் பராமரிப்பு போன்றவை குறித்த தகவல்களையும் அவற்றின் அறிவியல் பின்னணிகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தன, நிப்பான் மீன் பண்ணையும் ஐ.டி. மெங் தோட்டமும்.
“மீன்களின் கழிவுகள் செடிகளுக்கு உரமாகப் பயன்படுவதை அறிந்துகொண்டேன். மீன் பராமரிப்பு குறித்தும் நாங்கள் கற்றுக்கொண்டோம்,” என்றார் சுற்றுலாவில் கலந்துகொண்ட ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் சக்தி தயலாம் பிள்ளை.
சிங்கப்பூரின் கடந்தகால, தற்கால, வருங்காலச் சூழல்களைக் காட்டும் சிங்கப்பூர் நகரக் காட்சிக் கூடத்தில் நவீன சிங்கப்பூரின் வளர்ச்சி குறித்து அறிந்துகொண்டனர் மாணவர்கள். அறிவார்ந்த தேசமாக உருமாறிவரும் சிங்கப்பூரில் தங்களது வருங்காலத்தைக் கற்பனை செய்துபார்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
“பிற நாடுகளில் நீர், மின்சார நிர்வாக அமைப்புகள் தரைக்குமேல் அமைக்கப்பட்டு உள்ளன. சிங்கப்பூரில் இவை அனைத்துமே நிலத்தடியில் இருப்பதை அறிந்து வியந்தேன். இதனால், இடத்தை மிச்சப்படுத்த முடிவதைத் தெரிந்துகொண்டேன்,” என்றார் நார்த்லேண்ட் தொடக்கப்பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர் முகமது நூர் ஜாஹீர்.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் செயற்குழு உறுப்பினரான கலைவாணி இளங்கோ இச்சுற்றுலாவின் நோக்கத்தைப் பற்றி கூறுகையில், “இந்த அனுபவம் வகுப்பறைக்கு அப்பாலும் தமிழ்மொழியைத் தொடர்ந்து ஆர்வத்துடன் பேச ஊக்குவிப்பதோடு மாணவர்கள் சிங்கப்பூரைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை அளிக்கிறது,” என்றார். இச்சுற்றுலாவுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வோர் இடமும் வெவ்வேறு வகையான அனுபவங்களைத் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“மீன் பண்ணையில் மீன் பிடித்தது மாணவர்களுக்கு கட்டாயம் புது அனுபவமாக இருந்திருக்கும். ஐ.டி. மெங் தோட்டத்தில் இடப்பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில் இத்தகைய ஒரு தோட்டம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்,” என்றார் அவர்.
குழுக்களாக சுற்றிப்பார்த்து, நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், புதிய நண்பர்களைச் சந்தித்து தமிழில் கலந்துரையாட இது நல்ல வாய்ப்பாக அமைந்ததெனக் கூறினார் தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி சுவாமிநாதன்.
நண்பர்கள் மூலமாக இச்சுற்றுலாவைப் பற்றி தெரிந்துகொண்ட ஐந்தாம் வகுப்பு மாணவர் தீலன் ஸ்ரீராம், பள்ளி விடுமுறையை நல்லமுறையில் பயன்படுத்திப் பயனடைந்த மனநிறைவினை இவ்வனுபவம் கொடுத்ததாகக் கூறினார்.
மாணவர்களின் படைப்பாக்கத் திறனை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் ‘தமிழில் ஒரு சுற்றுலா’ நிகழ்ச்சி, ஈராண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது.