குடும்பத்தினரின் ஈஸி-லிங்க் பயண அட்டைகளுக்குப் பணம் நிரப்புவதை எளிதாக்கும் புதிய நடைமுறை அறிமுகம்
பிள்ளைகள், வயதான பெற்றோர் எனக் குடும்பத்தினர் பலரின் ஈஸி-லிங்க் அட்டைகளுக்குப் பணம் நிரப்பும் பொறுப்பில் உள்ள பயணிகளுக்கு உதவும் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
புதிய குடும்பக் கணக்குத் திட்டம் இவ்வாறு தொகை நிரப்புவதை எளிதாக்கும்.
இதன்கீழ், ஒரு கணக்குடன் ஏழு ஈஸி-லிங்க் அட்டைகள் வரை இணைக்க முடியும்.
பின்னர் ஈஸி-லிங்க் கைப்பேசிச் செயலி மூலமாக தொலை இயக்கமுறையில் எங்கிருந்தும் அந்த அட்டைகளில் தொகையை நிரப்பலாம்.
முன்பு ஒரு கணக்குடன் ஓர் அட்டையை மட்டுமே இணைக்க முடிந்தது.
குடும்பக் கணக்கைத் தொடங்குபவர் அதனை நிர்வகிக்கும் உரிமையைப் பெறுவார்.
அவர் பின்னர் ‘சிம்ப்ளிகோ ஈஸி-லிங்க்’ அல்லது ‘சிம்ப்ளிகோ’ சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் ஆறு பேரை இந்தக் கணக்கைச் சார்ந்திருப்போராக சேரும்படி அழைப்பு விடுக்கலாம்.
சார்ந்திருப்போர் பயண அட்டைகள் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டன என்ற விவரங்களை கணக்கை நிர்வகிப்பவர் அறிய இயலும்.
மறதிநோயால் பாதிக்கப்பட்டோரின் பராமரிப்பாளர்கள் போன்றோருக்கு இது பெரும் உதவியாக இருக்குமென ஈஸி-லிங்க் நிறுவனம் தெரிவித்தது.
இப்போதைக்கு, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான சலுகைக் கட்டண அட்டைகளை இத்தகைய குடும்பக் கணக்குடன் இணைக்க இயலாது.
இருப்பினும் இவ்வாண்டின் பிற்பகுதியில் அவற்றையும் இணைக்கத் திட்டமிடப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.
“குடும்பங்களின் அன்றாடச் செலவுகள், பயணங்கள் ஆகிய இரு அம்சங்களின் செயல்திறனை மேம்படுத்தி, அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் நிர்வகிப்பது சிறிய செயலாகத் தோன்றினாலும் அது மிகவும் முக்கியமானது.
“புதிய குடும்பக் கணக்கு இதற்குக் கைகொடுக்கும் என நம்புகிறோம்,” என்று ஈஸி-லிங்க் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கலஸ் லீ கூறினார்.
ஈஸி-லிங்கின் மின்னிலக்கச் சேவைக் கட்டமைப்பில் மேலும் அதிக எண்ணிக்கையில் முதிய பயணிகளையும் சார்ந்திருப்போரையும் இணைப்பது இப்புதிய திட்டத்தின் நோக்கம்.
வருங்காலத்தில் இதில் மேலும் பயனுள்ள அம்சங்கள் சேர்க்கப்படும்.
எடுத்துக்காட்டாக, பயண அட்டையில் மீதமிருக்கும் தொகை குறையும்போது, குடும்பக் கணக்கை நிர்வகிப்பவருக்கு, அதுகுறித்து செயலி மூலம் தகவல் அனுப்பப்படும் என்று நிறுவனம் கூறியது.