‘தலைசிறந்த பொருளியல் சிந்தனையாளர்’
அரசியலில் நுழைவதற்குமுன், 1982ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஒரு பொருளியலாளராகச் சேர்ந்து, தமது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கினார் திரு தர்மன் சண்முகரத்னம். பின்னர் 1995ஆம் ஆண்டு கல்வி அமைச்சில் சேர்ந்த அவர், ஈராண்டுகளுக்குப்பின் மீண்டும் நாணய ஆணையத்திற்குத் திரும்பினார்.
1999ஆம் ஆண்டு பொது நிர்வாகத் தங்கப் பதக்கம் பெற்ற இவர், 2001ஆம் ஆண்டில் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சிங்கப்பூரை ஒரு ‘நிதி மையமாக’ மாற்றியதில் இவருக்குப் பெரும்பங்குண்டு. நிதியமைச்சராக ஒன்பதாண்டுகாலம் பதவி வகித்த இவர், சிங்கப்பூர் ‘நிதித்துறைப் பேரரசர்’ என அழைக்கப்பட்டார்.
திரு தர்மனுடன் இணைந்து பணியாற்றியவர்கள் அவரை ‘சிங்கப்பூரின் தலைசிறந்த பொருளியல் சிந்தனையாளர்களில் ஒருவர்’ என வருணித்தனர்.
அரசியல் பயணம்
கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் ‘சூப்பர் செவன்’ வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டார் திரு தர்மன்.
அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஜூரோங் குழுத்தொகுதியில் இப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப், திரு லிம் பூன் ஹெங், திருவாட்டி யு ஃபூ யீ சூன், டாக்டர் ஓங் சிட் சுங் ஆகியோருடன் சேர்ந்து திரு தர்மன் களமிறங்கினார். அத்தேர்தலில் 79.75% வாக்குகளுடன் வெற்றிபெற்று தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் திரு தர்மன்.
அரசியலில் குதித்தது ஏன் என்று கேட்டதற்கு, சிங்கப்பூர் எதிர்கொண்ட புதிய சவால்களுக்குத் தீர்வுகாண உதவ விரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர், நிதியமைச்சர், துணைப் பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், இப்போது மூத்த அமைச்சர் என அமைச்சரவையில் பல பொறுப்புகளை ஏற்றுள்ளார் திரு தர்மன்.
விளையாட்டில் பெருநாட்டம்
பின்னாளில் அரசியலில் குதிப்பார் என்பதற்கு இளவயதிலேயே திரு தர்மனிடத்தில் சில அறிகுறிகள் தெரிந்தன.
ஆங்கிலோ-சீனப் பள்ளியில் படித்தபோது, திரு தர்மன் படிப்பில் துளியும் நாட்டமில்லாதவராக இருந்தார் என்று 2004ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
ஆனால், திரு தர்மனுக்கு மருத்துவம் படிக்க அறவே ஆர்வம் இல்லை. மாறாக, ஹாக்கி, காற்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, செப்பாக் தக்ராவ், ரக்பி, திடல்தட போட்டிகள் என விளையாட்டின்மீது பேரார்வம் கொண்டிருந்தார். பெரும்பாலும் எல்லா நாளும் இவர் விளையாடுவதற்கு நேரம் செலவழித்தார்.
ஆனால், 17வது வயதில் தீவிர ரத்த சோகையால் பாதிக்கப்பட, இவரது விளையாட்டுக் கனவுகள் நொறுங்கின. அதற்காகப் பல ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 25 மாத்திரைகளை இவர் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
திரு தர்மன் தீவிர வாசகரும்கூட; அவ்வப்போது கவிதையும் எழுதினார். பள்ளித்தோழர்கள் இருவருடன் சேர்ந்து 1978ஆம் ஆண்டில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் இவரின் நான்கு கவிதைகள் இடம்பெற்றன. அப்போது, தேசிய நூலகத்தில் இளம் எழுத்தாளர்கள் வட்டத்திலும் அவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அரசியல் செல்வாக்கு
தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கையில், திரு தர்மன் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளில் ஒருவராகத் திகழ்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், இவர் தலைமையிலான மசெக அணி ஜூரோங் குழுத் தொகுதியில் 79.29% வாக்குகளைப் பெற்றது.
திரு தர்மனே அடுத்த பிரதமர் என்று ஊகமும் அவ்வப்போது எழுந்தன.
கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் பங்கேற்றோரில் 69 விழுக்காட்டினர் திரு தர்மன் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதை ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், திரு தர்மன் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
“கொள்கை வகுப்பில், இளம் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவதில், பிரதமருக்கு ஆதரவு வழங்குவதில் நான் சிறந்தவன். ஆனால், பிரதமராக இருப்பதில் நான் சிறந்தவனல்லன். அது நான் இல்லை,” என்று திரு தர்மன் அப்போது கூறினார்.
உலகளவில் நன்மதிப்பு
அனைத்துலகப் பண நிதியத்தின் அடுத்த தலைவராகத் திரு தர்மன் நியமிக்கப்படலாம் என்று அனைத்துலக ஊடகங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டன.
தமது பொதுச் சேவைக் காலத்தின்போது, திரு தர்மன் பொருளியல், நிதிச் சீர்திருத்தத்திற்கான பல்வேறு அனைத்துலக மன்றங்களின் தலைவராகச் செயலாற்றி இருக்கிறார்.
அனைத்துலகப் பண, நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் ஆசியர் என்ற பெருமைக்கு இவரே சொந்தக்காரர்.
ஐநா தலைமைச் செயலாளரால் ஏற்படுத்தப்பட்ட உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.
கொவிட்-19 பரவலின்போது, பெருந்தொற்றுத் தயார்நிலை, நடவடிக்கை உலக நிதிக்கான ஜி20 உயர்நிலைத் தன்னிச்சைக் குழுவின் இணைத் தலைவராகவும் திரு தர்மன் பொறுப்பேற்றிருந்தார்.