சிங்கப்பூர்: தெமாசெக்கின் மொத்த பங்குதாரர் வரவு கடந்த நிதியாண்டில் ஐந்து விழுக்காடு சரிவடைந்ததற்கு, மற்ற நிதிகளும் எதிர்நோக்கும் அதே சவால்மிகுந்த சந்தை நிலவரங்களே காரணம். அதோடு, தெமாசெக் அடக்கமான மதிப்பீட்டு முறையையும் பயன்படுத்துகிறது.
தெமாசெக்கின் வருடாந்தர நிதிநிலை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான திரு டில்ஹன் பிள்ளை சந்திரசேகரா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
தெமாசெக்கின் பட்டியலிடப்படாத முதலீடுகள், சேதாரம் கழிக்கப்பட்ட ஏட்டு மதிப்பில் மதிப்பிடப்பட்டன. “நாங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மதிப்பிடுவதாக இருந்தால், $18 மில்லியன் மதிப்புயர்வைப் பதிவு செய்திருப்போம்,” என்றார் திரு பிள்ளை.
இருந்தாலும், தெமாசெக்கின் $382 பில்லியன் மதிப்புள்ள முதலீட்டுப் பட்டியலின் மொத்த பங்குதாரர் வரவு மூன்று ஆண்டுகாலத்தில் எட்டு விழுக்காடாகவும், 20 ஆண்டுகாலத்தில் ஒன்பது விழுக்காடாகவும் இருந்தது.
முதலீட்டு நிலவரம் கடந்த ஓராண்டில் அதிக சிக்கலாகி இருப்பதாகத் திரு பிள்ளை சுட்டிக்காட்டினார். இருந்தாலும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் சொன்னார்.
“நாங்கள் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து சீனாவிலும் இந்தியாவிலும் நீண்டகாலமாக முதலீடு செய்து வருகிறோம். இந்நாடுகளின் பொருளியல் வளர்ச்சியோடு, எங்களது முதலீட்டுப் பட்டியலிலும் கணிசமான வளர்ச்சி அடைந்திருக்கிறோம்,” என்றார் அவர்.
“இவ்விரு சந்தைகளிலும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகிறோம்.
“இந்தியாவில் நடுத்தர வருமானத்தினர் அதிகரித்து வருவதால், பயனீடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பரவலான மின்னிலக்கமயம் இதற்குத் துணை புரிகிறது.
“இதனால் பயனீட்டாளர், மின்னிலக்கம், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் நீண்டகால வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.”
சீனாவில் அண்மையில் நடப்புக்கு வந்த ஒழுங்குமுறை மேம்பாடுகளுடன் சந்தைக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அதிக தெளிவு கிடைத்திருப்பதாகத் திரு பிள்ளை கூறினார். பொருளியல் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் இணைய நிறுவனங்கள் கணிசமாகப் பங்களிப்பதை சீன அரசாங்கம் உணர்ந்திருப்பதை இது காட்டுகிறது.
பேட்டியில் கலந்துகொண்ட தெமாசெக் இன்டர்நேஷனலின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு சியா சொங் ஹுவீ, “மின்னிலக்கமயம், நீடித்து நிலைக்கவல்ல வாழ்க்கைமுறை, எதிர்காலப் பயனீடு, நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று கூறினார்.
“இவையே இன்றைய வழிகாட்டிக் கொள்கைகள். நாங்கள் மூலதனத்தை எங்கே ஒதுக்குகிறோம் என்பதை காட்டுகின்றன,” என்றார் அவர்.