பெற்றோர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கக்கூடிய மசோதா நிறைவேற்றப்படலாம்

பெற்றோர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கக்கூடிய மசோதா நிறைவேற்றப்படலாம்

2 mins read
1835e49a-3cc1-408e-bc8e-d8fa00472579
பிள்ளைகளின் வாழ்க்கையில் தந்தையர் பெரும் பங்காற்றும்போது அப்பிள்ளைகள் உடல்ரீதியாக, அறிவுரீதியாக, உணர்வுரீதியாக கூடுதல் பலன் காண்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெற்றோர்கள் தங்களின் பயணத்தை மேலும் சுமுகமாக மேற்கொள்வதற்கு ஆதரவாய் புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்படக்கூடும். தந்தையருக்கான விடுப்பை இருமடங்காக்குவது உள்பட பிள்ளைப்பேறு தொடர்பான பலன்களை வலுவாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று உறுப்பினர்கள் விவாதித்தனர்.

பெற்றோருக்கான விடுப்புத் திட்டங்களில் செய்யப்படவுள்ள மேம்பாடுகள் குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அரசாங்கம் சம்பளத்துடன் கூடிய தந்தையர் விடுப்பை நான்கு வாரங்களுக்கு நீட்டிப்பதாகவும் சம்பளமில்லா குழந்தைப் பராமரிப்பு விடுப்பை 12 நாள்களுக்கு நீட்டிப்பதாகவும் கூறப்பட்டது.

இத்துடன் குழந்தை போனஸ் ரொக்க வெகுமதித் தொகையை $3,000 அதிகரிக்க உள்ளதாகவும் 2023 ஆண்டின் பிப்ரவரி 14ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் அரசாங்கத்தின் இணைச் சேமிப்புத் தொகையைக் கூட்ட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

பிள்ளை மேம்பாட்டு இணைச் சேமிப்புத் திட்ட (திருத்தம்) மசோதாவின் இரண்டாவது வாசிப்பின்போது சமூக, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பேசினார்.

சிங்கப்பூரில் உள்ள தந்தையரில் பாதிக்கு மேற்பட்டோர் தந்தையர் விடுப்பு எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த அதிகரிப்பால் பிள்ளைகளை ஆரம்பக்கட்டத்திலிருந்தே அரவணைக்கும் தன்மையைத் தந்தையர் பெற முடியும். பிள்ளைகளின் வாழ்க்கையில் தந்தையர் பெரும் பங்காற்றும்போது அப்பிள்ளைகள் உடல்ரீதியாக, அறிவுரீதியாக, உணர்வுரீதியாக கூடுதல் பலன் காண்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன,” என்றார் திருவாட்டி சுன்.

இந்த மசோதாவின் மூலம் பெற்றோர் தங்களின் வேலையையும் குடும்பப் பொறுப்புகளையும் சமாளிக்கக் கூடுதல் ஆதரவு பெறுவார்கள். பிள்ளைப் பராமரிப்பில் பெற்றோர் இருவரும் மேலும் அதிக பகிரப்பட்ட பொறுப்பை ஏற்பார்கள் என்று குறிப்பிட்டார் அமைச்சர் சுன்.

இதுவரை மசோதா தொடர்பில் 13 எம்.பி.க்கள் பேசியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்