அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் சிங்கப்பூரின் மேம்பட்ட எஃப்-16 போர் விமானங்கள்

அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் சிங்கப்பூரின் மேம்பட்ட எஃப்-16 போர் விமானங்கள்

2 mins read
c26042c9-5fea-44de-9c9f-193e649af1dc
எஃப்-16 விமானத்தில் செய்யப்பட்ட நவீன வசதிகளை விவரித்த லெப்டினன்ட் கர்னல் டான் யோங் சின் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் எஃப்-16 போர் விமானங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

விமானியின் மேம்பட்ட தலைக்கவசம் அவற்றில் ஒன்று.

விமானத்தை எதிரியின் விமானத்தை நோக்கித் திருப்புவதற்குப் பதிலாக விமானி தனது தலையை மட்டும் திருப்பினால் போதும். எதிரி விமானத்தை ஆயுதங்களால் குறி வைத்துவிட முடியும்.

இதற்கு தேவைப்படும் முக்கிய விவரங்களை தலைக்கவசத்தில் இடம்பெற்றுள்ள மின்திரை வழியாக விமானிகள் பெற முடியும்.

1998ல் சிங்கப்பூர்க் குடியரசு விமானப்படை சேவையில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட எஃப்-16 போர் விமானங்கள் காலம் கடந்தவையாக இருக்கின்றன.

இந்த நிலையில் பலதரப்பட்ட வசதிகளுடன் அவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

விமானிகள் தொலைதூர இலக்குகளைக் கண்டறிய உதவும் நீண்டதூர ‘ரேடார்’ சாதனம், இருபது கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய பைதோன்-5 ஏவுகணை உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் மேம்படுத்தப்பட்ட எஃப்-16 விமானங்கள் அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் காட்டப்பட்டன.

இடாஹோவில் செப்டம்பர் 11 முதல் 30 வரை இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.

சென்ற வியாழக்கிழமை ‘மவுண்டன் ஹோம்’ விமானப்படைத் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லெப்டினன்ட் கர்னல் டான் யோங் சின், வயது 39, மேம்படுத்தப்பட்ட எஃப்-16 போர் விமானங்கள், எஃப்-15எஸ்ஜி போர் விமானங்களுக்கு இணையாகச் செயல்படும் ஆற்றலைப் பெற்றுள்ளன என்றார்.

எஃப்-15எஸ்ஜியில் இருப்பது போன்ற தரவுகளுக்கான தொடர்பு வசதி முன்பு எஃப்-16 விமானங்களில் இல்லை. இதனால் விமானிகள் தங்களுக்குள்ளாகவே தரவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதில் தகவல்களை தவறாக புரிந்துகொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் மிக நீண்டகாலமாக வெளிநாட்டில் செயல்படும் படைப் பிரிவான ‘பீஸ் கார்வின் II’ தளபதி டான் கூறினார்.

தரவுகளுக்கான புதிய இணைப்பினால் எஃப்-16 விமானிகள், இதர விமானங்கள் அல்லது தரைப்படைகளுடன் இலக்குகளுக்கான விவரங்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டிலிருந்து F-16 விமானியாக இருக்கும் திரு டான், விமானி அறையில் புதிய மத்திய மின்திரைப் பலகை இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இருபுறமும் இரண்டு சிறிய மின்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு விமானிகள் ஒரே திரையில் வெவ்வேறு விவரங்களுக்காக இடையிடையே மாற வேண்டியிருந்தது. பெரிய மூன்றாவது திரை, விமானிகளுக்குத் தேவையான தகவல்களை சுலபமாக வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்