கடந்த சில நாள்களாக சுமத்ராவில் ஏற்பட்ட காட்டுத் தீச்சம்பவங்களும் அதனால் பக்கத்து நாடுகளில் ஏற்படும் புகைமூட்டமும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டில் (பிஎஸ்ஐ) ஏற்பட்ட மாற்றங்களும் பேசுபொருளாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூரிலும் தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் தலைமையில் புகைமூட்டம் தொடர்பான பணிக்குழு, நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.
வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்குமுன், காற்றின் தரம் குறித்து அறிந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, சுவாசப் பாதுகாப்பை உறுதிசெய்யும் முயற்சியாக, ‘பாதுகாப்பான காற்றுக் குவிமாடம்’ எனும் புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய காற்றுச் சுத்திகரிப்புக் கருவியைத் தயாரித்து வெளியிட்டுள்ளது ‘ட்ரைடென்ட் ஏர்’ நிறுவனம்.
அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்துடன் இணைந்து, ‘பிளாஸ்மா சயின்ஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ள ‘டிரைடென்ட் மினி-2’ எனும் இக்கருவி, அளவில் சிறிதாக இருப்பதோடு, காற்றை விரைவாகச் சுத்திகரித்து, சுவாசப் பாதுகாப்பை உறுதிசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘டிரைடென்ட்’ கருவி நோய்ப் பரவலைத் தடுப்பதோடு மூக்கடைப்பு , ‘சைனசிடிஸ்’ எனும் சுவாசக் கோளாறு, சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபட உதவுகிறது.
மேலும், எளிதாகப் பயன்படுத்தும் வகையில், திறன்பேசிச் செயலி, பிஎஸ்ஐ குறியீடுகளின் நிகழ்நேரக் கண்காணிப்பு ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஏறத்தாழ 32 முதல் 60 சதுர மீட்டர் வரையிலான பரப்பளவைச் சுத்திகரிக்கும் திறன் பெற்றிருப்பதால் பலதரப்பட்ட இடங்களில் பயன்படுத்த ஏற்புடையதாக இது கருதப்படுகிறது.
எளிதாகப் பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வடிகட்டிகள், தகடுகள் போன்றவற்றுடன் குறைந்த மின்சாரத் தேவையும் இதன் சிறப்பம்சங்கள்.
நீடித்த நிலைத்தன்மைக் கொள்கைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இக்கருவி, தற்பொழுது இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.