குவீன்ஸ்டவுனுக்குள் உள்ள சிங்கப்பூரின் ஆகப் பழைய குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றான தங்ளின் ஹால்ட்டில், அதன் மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக, 5,500 வீவக வீடுகள் வரை கட்டப்படும்.
அங்கு கட்டப்படக்கூடிய வீவக அடுக்குமாடி வீடுகள் பல கடைகளோடும் உணவங்காடி நிலையத்தோடும் சந்தையோடும் இணைந்தபடி இருக்கும்.
அந்தக் குடியிருப்புப் பேட்டையின் முக்கியமான அங்கமாக அந்த ஒருங்கிணைந்த மேம்பாடு திகழும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஸ்டெர்லிங் ரோட்டில் செயல்படும் குவீன்ஸ்டவுன் பலதுறை மருந்தகம் புதிய வளாகத்திற்கு இடம் மாறும்.
இப்போது உள்ள தங்ளின் ஹால்ட் சந்தை, காமன்வெல்த் டிரைவ் உணவு நிலையம் ஆகியவை அமைந்துள்ள முன்னாள் தங்ளின் ஹால்ட் அக்கம்பக்க நிலைய இடத்தில் புதிய கட்டுமானம் உருவாகும்.
தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வியாழக்கிழமை இது பற்றி அறிவித்தார்.
தங்ளின் ஹால்ட் குடியிருப்புப் பேட்டையின் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் எதிர்கால தலைமுறையினருக்கு மேலும் பல்வேறு வீட்டு வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.
தங்களுடைய பெற்றோருக்கு அருகே வசிக்க விரும்பும் இளம் குடும்பங்களுக்கும் அது பேருதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அந்தக் குடியிருப்புப் பேட்டைக்குள் இளம் குடும்பத்தினர் அதிகமாக குடியேறுவார்கள் என்பதால் தங்ளின் ஹால்ட் காலவோட்டத்தில் மிகவும் துடிப்புமிக்க பகுதியாகத் திகழும் என்று அவர் கூறினார்.
தோ பாயோவில் உள்ள வீவக மையத்தில் நடந்த வீவக நிபுணத்துவ ஈடுபாடு, உத்திப் பகிர்வு கருத்தரங்கில் திரு டான் பேசினார்.
தங்ளின் ஹால்ட் குடியிருப்புப் பேட்டையில் 3,480 குடும்பங்கள் வசித்தன. அது ஒட்டுமொத்த மறுஉருவாக்கத் திட்டத்திற்காக 2014ல் அடையாளம் காணப்பட்டது.
அங்கு வசித்தவர்களில் பெரும்பாலானவர்கள் டாவ்சன் வட்டார வீடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள்.
அங்குள்ள பழைய கட்டடங்கள் இப்போது இடிக்கப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த புதிய உருவாக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடக்கும்.
முன்னாள் காமன்வெல்த் டிரைவ் உணவு நிலையம் இருந்த இடத்தில் 2024 இரண்டாவது பாதியில் கட்டுமானப் பணி முதலில் தொடங்கும்.
முதல் கட்டம் முடிந்ததும் பக்கத்தில் உள்ள தங்ளின் ஹால்ட் சந்தையில் கடை நடத்துவோர் புதிய இடத்திற்கு இடம் மாறுவார்கள்.
பிறகு அந்த இடத்தில் இரண்டாவது கட்டுமானம் தொடங்கும் என்று வீவக கூறியது.
ஒருங்கிணைந்த அந்த புதிய உருவாக்கத்தில் கட்டப்படும் புதிய வீடுகள் 2024ல் விற்பனைக்குக் கொடுக்கப்படும்.
அந்தக் குடியிருப்புப் பேட்டையின் வரலாறும் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கூடுமான வரை கட்டிக்காக்கும் வகையில் மறுஉருவாக்கத் திட்டங்கள் தீட்டப்படும் என்று திரு டான் கூறினார்.
குடியிருப்புப் பேட்டைக்குப் புதுப்பொலிவு அளிக்கும் வகையில் புதிய அம்சங்களும் சேர்க்கப்படும். மேலும் பசுமை வளம் சேர்க்கப்படும்.
இதனிடையே, தங்ளின் ஹால்ட்டில் வாடகை வீடுகள் இடம்பெறுமா என்று கேட்டதற்குப் பதிலளித்த திரு டான், இது பற்றி அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
குவீன்ஸ்டவுன் புதுப்பொலிவு பெறவிருக்கிறது. புதிய பூங்காக்கள், உடற்பயிற்சி வழிகள், சைக்கிளோட்ட வழிகள், உடல், மனநல தோட்டங்கள் எல்லாம் 2025 முதல் கட்டி உருவாக்கப்படும்.
இதனால் குவீன்ஸ்டவுனிலும் ஃபேரர் ரோடு குடியிருப்புப் பேட்டையிலும் வசிக்கும் சுமார் 79,000 குடியிருப்பாளர்கள் பலனடைவார்கள்.