குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் சட்ட உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் வழக்குரைஞர் அலுவலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம்வரை 303 குற்றவியல் வழக்குகளில் உதவியுள்ளது.
சட்ட அமைச்சின்கீழ் வரும் இந்த அலுவலகம் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வரிப்பணத்தில் உருவாகியுள்ள இந்த அலுவலகம் மரண தண்டனையைக் கொண்டிராத வழக்குகளில் உதவி தேவைப்படுவோருக்காக முழுநேர வழக்கறிஞர்களை அமர்த்துகிறது.
இந்த அலுவலகம் தோன்றியதிலிருந்து கிளாஸ் எனப்படும் குற்றவியல் இலவச சட்ட உதவி நிலையத்தின் சுமை குறைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட விவரங்களை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். புக்கிட் பாத்தோக் உறுப்பினர் முரளி பிள்ளையின் கேள்விகளுக்கு திரு சண்முகம் பதிலளித்தார் .