இந்திய பாரம்பரிய கர்நாடக சங்கீதத்தில், பிற இந்திய மாநில, மலாய், சீனம், ஸ்பானிய உள்ளிட்ட பகுதிகளின் பாரம்பரிய, சமகால இசை வகைகளை உட்புகுத்தி, தனித்துவமான இசைத் தொகுப்பை படைத்துள்ளனர் ‘ஸ்வரிதம்’ இசைக் குழுவினர்.
கலா உத்சவத்தின் ஓர் அங்கமாக, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) வெளியிடப்பட்ட இந்த இசைத் தொகுப்பில், கர்நாடக, ஹிந்துஸ்தானி வகை பாடல்களும் தப்லா, சித்தார், மிருதங்கம், வயலின், கஞ்சீரா, புல்லாங்குழல் தொடங்கி மகாராஷ்டிர மாநில இசைக் கருவியான ‘டோல்’, கேரள செண்டை மேளம், ‘ஸ்பைக் பிடில்’ எனும் சீன இசைக்கருவி, ‘மங்கோலியன் ஹார்ஸ் ஹெட்டெட் பிடில்’, ‘ஸ்பானிஷ்’ கித்தார், கீபோர்டு, டிரம்ஸ் ஆகிய கருவிகளின் இசையும் இடம்பெற்றன.
இந்திய இசைக்கு மறுவடிவம் கொடுக்கவும் இசையின் வழி தத்துவத்தை உணர்த்துவதும் இந்தத் தொகுப்பின் குறிக்கோள் என்கின்றனர் ‘ஸ்வரிதம்’ குழுவினர்.
அரங்கம் நிறைந்த பல்லின இசை ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த இசைத் தொகுப்பு ஏறத்தாழ ஒரு மணி நேரம் நிகழ்த்தப்பட்டது.
‘சில்க் ரூட்’ எனப்படும் ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்கப் பகுதிகளை இணைத்த வழித்தடம், வணிக பரிவர்த்தனையோடு கலாசார பரிவர்த்தனைக்கும் வழிவகுத்தது.
அதை அடிப்டையாகக் கொண்டு, அப்பகுதி இசைக் கருவிகளுடன் இந்திய இசைக் கருவிகளை இணைத்து உருவாக்கப்பட்டு இசைக்கப்பட்ட பகுதி அரங்கை அதிரவைத்தது.
இதுகுறித்துப் பேசிய வயலின் கலைஞர் பாம்பே ஆனந்த், “இசைக்கு எல்லை இல்லை. மொழி, இனம் என எந்த வேறுபாடும் இல்லை. அதை உணர்த்தும் வகையில் பல நாட்டு இசைக் கலைஞர்களுடன் இணைந்து இதைப் படைக்க எண்ணினோம். அது கைகூடியது மகிழ்ச்சி,” என்றார்.
மிருதங்கம், கடம், கஞ்சீரா, டிரம் பேட் உள்ளிட்ட தாள வாத்தியக் கருவிகளை வாசிக்கும் மகேஷ் பரமேஸ்வரன், “நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது.
“ஒவ்வொரு கருவியும் அதன் பாரம்பரியத்தை இழக்காமல், இந்த ஒன்றிணைவில் கச்சிதமாக கலந்தது இத்தொகுப்பின் சிறப்பு. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களுடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம்,” என்றார்.
தப்லா இசைக்கலைஞரும், ‘ஸ்வரிதம்’ அமைப்பின் நிறுவனருமான நவாஸ் மிராஜ்கர், “இசை ரசிகர்கள் எதிர்பார்க்கும் தனித்துவமிக்க இசைப் படைப்பை வழங்கியதில் பெருமை.
“ரசிகர்கள் இதைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இந்த நிகழ்வை நடத்த வாய்ப்பு தந்த தேசிய கலைகள் மன்றத்திற்கும் எஸ்பிளனேட் அரங்கம் செய்த ஏற்பாடுகளுக்கும் நன்றி,” என தெரிவித்தார்.
இந்நிகழ்வை குதூகலத்துடன் ரசித்த ஜப்பானியரான நிக், “நான் சிங்கப்பூர் வந்து சில மாதங்களே ஆகின. இந்நாட்டின் பல்லின கலாசாரத்தை ரசிக்கிறேன். நான் பெரும் இசை ரசிகை. அதிலும் குறிப்பாக, இந்திய இசை மீது எனக்கு அலாதிப் பிரியம். இவ்விரண்டும் கலந்த தொகுப்பாக இந்த இசை நிகழ்வு அமைந்ததை அறிந்து இங்கு வந்தேன்,” என்றார்.
இசை ரசிகரும் தப்லா கலைஞருமான திரு லக்ஷ்மணன், “ஸ்வரிதம் குழுவில் எனக்குப் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் இப்படி ஒரு தொகுப்பை வெளியிடுவது எனக்கும் பெருமை,” என்றார்.
மற்றோர் இந்திய இசை ரசிகரான உக்ரேனைச் சேர்ந்த ஹிரோமி, “நான் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆசிய நாடுகளில் வசிக்கிறேன். ஆசிய நாகரிகமும் இசையும் இணையும் இச்சங்கமத்தைக் காண ஆவலோடு வந்தேன்,” என்றார்.