ஜெனிவா: சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானத்துறை எரிபொருள் தயாரிப்பு அடுத்த ஆண்டு மும்மடங்காகும், அதாவது 1.875 பில்லியன் லிட்டராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது விமானத் தொழில்துறையின் எரிபொருள் தேவைகளில் 0.53 விழுக்காடாகும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.
இருப்பினும், 2030ஆம் ஆண்டுக்குள் இத்தகைய நீடித்த நிலைத்தன்மையுடைய விமானத்துறை எரிபொருள் 5 விழுக்காடாக இருக்க வேண்டும் என்ற இலக்குக்கு மிகப் பின்தங்கிய நிலை இது.
இந்த இலக்கை அடைய வேண்டுமெனில் 2030ஆம் ஆண்டு வரை சுமார் 17.5 பில்லியன் லிட்டர் அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான எரிபொருள் ஆண்டுதோறும் தயாரிக்க வேண்டியிருக்கும். 2024ஆம் ஆண்டில் முன்னுரைக்கப்பட்ட எரிபொருள் அளவைக் காட்டிலும் இது ஒன்பது மடங்காகும்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் டிசம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துலக ஊடகத் தினத்தன்று அனைத்துலக விமானப் போக்குவரத்துக் கழகம் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான எரிபொருள் அளவு இவ்வாண்டு 600 மில்லியன் லிட்டரை எட்டியது. இது 2022ல் தயாரிக்கப்பட்ட 300 மில்லியன் லிட்டரைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்றது கழகம்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து நீடித்த நிலைத்தன்மையுடைய விமான எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய நிறுவனங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் 5% நீடித்த நிலைத்தன்மையுடைய விமானத்துறை எரிபொருள் தயாரிப்பு இலக்கை அடைவது குறித்து தத்தம் கடப்பாட்டைத் தெரிவித்திருந்தன.