புதிய உணவு தொழில்நுட்ப நிறுவனமான ‘லைஃப்3’ பாய லேபாரில் அடுத்த 2024ன் இரண்டாம் காலாண்டில் தனது பசுமைச் சூழலுக்கு உகந்த உற்பத்தி ஆலையை திறக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த உற்பத்தி ஆலை 25,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் தனக்கே உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஆறு டன் அளவு காய்கறிகளையும் 1,400 டன் உண்பதற்கு ஏற்ற புரதத்தையும் உற்பத்தி செய்ய நிறுவனம் எண்ணம் கொண்டுள்ளது.
‘லைஃப்3’ நிறுவனம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஹிமாஸ் எனப் பெயர் கொண்டது. இது நுண்ணிய கடல்பாசியை சூரிய எரிசக்தியுடன் இணைக்கும் முறை எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் செயற்கை நுண்ணறிவு, சூரிய மின்சக்தி தகடுகளின் உயர்நிலை தொழில்நுட்பங்களின் உதவியுடன் நீடித்து நிலைத்திருக்கும் முறையில் உணவு உற்பத்தி செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த உணவுப் பொருள்கள் சூரிய மின்சக்தித் தகடுகளின் மின்னேற்றத்தால் செயல்படும் கனரக வாகனங்களின் துணை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
தற்பொழுது லைஃப்3 நிறுவனத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள். ஆனால் ‘லைஃப்3 அர்பன் சஸ்டெய்னபிலிட்டி ஹப்’ எனப் பெயர்கொண்ட புதிய ஆலை கட்டி முடிக்கப்படும்போது அதன் ஊழியர் எண்ணிக்கை ஏறக்குறைய 30ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமாஸ் என்ற இந்த உணவு உற்பத்தி முறை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய நேரடி உணவு உற்பத்தி முறை, சிங்கப்பூர் போன்ற நகர்களில் எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது என நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரிக்கி லின் வியாழக்கிழமை சொன்னார்.
மேலும் தமது நிறுவனம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்கள் விலங்கு புரதத்துக்கு மாற்றாக இராது என அவர் தெரிவித்தார். ஆனால், இவை சுகாதாரத்தைப் பேணும் மாற்று உணவுப் பொருள்கள் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், உணவு நெருக்கடி ஏற்படும்பொழுது நாம் இதை மாற்று உணவுத் தெரிவாகக் கொள்ளலாம் என்று கூறினார்.
“இதில் நல்ல அம்சம் என்னவெனில், பல வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே தாவர அடிப்படையிலான புரதத்துக்கு பழகிவிட்டனர்,” என்று கருத்துரைத்தார்.