சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
2025ல் இரு நாடுகளும் புதிய கட்டப் பங்காளித்துவ உறவில் அடியெடுத்து வைக்கின்றன.
உலகம் முழுவதும் புவிசார்அரசியல் பதற்றம் நிலவும் வேளையில் இரு நாட்டின் தலைவர்களும் புதிய, உத்திபூர்வ வழிகளில் ஒத்துழைக்க உறுதி தெரிவித்துள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விநியோகச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு, ஆகாயவெளித் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய துறைகளில் ஒத்துழைப்பு இருக்கும் என்று செவ்வாய்க் கிழமை அன்று (மார்ச் 5) பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
இரு நாடுகளின் முன்னுரிமைகள் நன்கு பொருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் இரு நாடுகளும் இணைந்து செய்யக்கூடியது இன்னும் அதிகமாக இருக்கிறது. ஒன்றுக்கு ஒன்று துணையாக உள்ள பொருளியல், ஒத்துப்போகும் உலகளாவிய கண்ணோட்டம், வட்டார மற்றும் உலக விவகாரங்களில் உத்திபூர்வ சிந்தனை ஆகியவற்றுடன் இரு நாடுகளும் இயற்கையாகவே பங்காளிகளாக விளங்குகின்றன,” என்று பிரதமர் லீ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அப்போது ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிசும் உடன் இருந்தார்.
மெல்பர்னில் சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய தலைவர்களின் வருடாந்திர கூட்டம் நிறைவடைந்த பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர்.
2022 அக்டோபரில் கையெழுத்தான சிங்கப்பூர்-ஆஸ்திரேலிய பசுமை பொருளியல் உடன்பாட்டின் தற்போதைய நிலவரத்தைப் பற்றி பேசிய திரு லீ, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார்.
சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருள் மற்றும் சேவை தொடர்பான வர்த்தகத்திற்கும் பசுமை பொருளியல் முதலீட்டுக்கும் அந்த உடன்பாடு வழிவகை செய்கிறது.
மார்ச் 5ஆம் தேதி இரு தலைவர்களும் பசுமை மற்றும் மின்னிலக்க கப்பல் பயணப் பாதை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை ஆர்வமுடன் வரவேற்றனர்.
இது, கடற்துறையில் கரிம வெளியேற்றம் இல்லாத நடவடிக்கைகளையும் அத்துறை மின்னிலக்கமயமாவதையும் ஊக்குவிக்கிறது. மேலும் இவ்வட்டாரத்தில் எல்லைத் தாண்டிய மின்சார வர்த்தகத்தை வழிநடத்த இரு தரப்பும் கூட்டாக கொள்கைகளை உருவாக்கியுள்ளன.
ஆசியான்-ஆஸ்திரேலியா உச்சநிலை சிறப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மார்ச் 6ஆம் தேதி வரை மெல்பர்னில் இருக்கும் பிரதமர் லீ, இரு தரப்பிலிருந்தும் அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்கள் அடுத்த அத்தியாயத்துக்கான ஒத்துழைப்பிற்கு ஆர்வமுள்ள திட்டத்தை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை(CSP) உருவாக்கி 10 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுகின்றன. அதோடு இரு நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவு தொடங்கி அடுத்த ஆண்டில் 60 ஆண்டுகள் நிறைவடையும்.
இதற்கிடையே உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் தேர்தலை சிங்கப்பூர் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் பிரதமர் லீ கூறினார்.
ஆனால் அது, அமெரிக்காவின் தேர்தல் நடைமுறை, இதில் யார் வெற்றி பெற்றாலும் சிங்கப்பூர் அதனை மதித்து ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.
“அமெரிக்க தேர்தலை நம்மால் தீர்மானிக்க முடியாது. நாம் வாக்களிப்பதில்லை,” என்று நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் தலைமைத்துவ மாற்றம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.