ஆசியான் வட்டாரத்தின் அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்கு ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட பங்கு உள்ளது, அதனால் கான்பரா ஆசியானின் பங்காளித்துவத்திற்கு ஆழ்ந்த ஈடுபாடு தர வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
மார்ச் 6ஆம் தேதி மெல்பர்னில் நடைபெற்ற ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் அந்த கருத்தை பிரதமர் லீ பதிவிட்டார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள பூசல் ஆசியானின் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காமல் இருக்க ஆசியான் - ஆஸ்திரேலியாவின் நெருக்கமான உறவு உதவுவதாக திரு லீ கூறினார்.
ஆசியானின் முதல் மற்றும் பழமையான கலந்துரையாடல் பங்காளி ஆஸ்திரேலியா. அது 1974ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. தென் கிழக்காசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பகிரப்பட்ட வரலாறு, புவியியல் மற்றும் உத்திபூர்வ ஆர்வங்களை உள்ளடக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆசியானுடன் 2021ஆம் ஆண்டு முதல் விரிவான உத்திபூர்வ பங்காளியாகவும் ஆஸ்திரேலியா இருந்து வருகிறது.
“நீண்ட கால பங்காளித்துவ உறவு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா ஆசியான் வட்டாரத்தில் அதன் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. அதை சிங்கப்பூர் வரவேற்கிறது.
“தென் கிழக்காசியாவின் எதிர்கால பொருளியல், உள்கட்டமைப்பு, விதிமுறைகள் போன்றவை ஆஸ்திரேலியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சரியாக திட்டமிட்டு கூட்டாக செயல்பட்டால் அது ஆஸ்திரேலியாவின் சொந்த வளர்ச்சிக்கும் பயனாக மாறும் என்று பிரதமர் லீ கூறினார்.
ஆஸ்திரேலியாவும் ஆசியான் நாடுகளுடன் உறவை மேம்படுத்திக்கொள்ள புது வர்த்தக ஒப்பந்தங்கள், பயண விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலிய வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க பத்தாண்டு விசா, 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.75 பில்லியன்) நிதி வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி திட்டமிட்டுள்ளார்.
“ஆஸ்திரேலியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 178 பில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் மேலாகிவிட்டது. ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான இருவழி வர்த்தகத்தைவிட இது அதிகம். ஆசியானுடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க விரும்புகிறோம்,” என்று திரு அல்பனீசி மார்ச் 5ஆம் தேதி உச்சநிலை மாநாட்டில் தெரிவிப்பார் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.