முன்னாள் அதிபர் டோனி டான், ‘டோனி டான் கெங் யாம்: எனது அரசியல் பயணம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
அந்நூலின் அதிகாரபூர்வ வெளியீட்டு நிகழ்ச்சி, மார்ச் 12ஆம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங், டாக்டர் டானின் நூல், அவரைப் போலவே கூடுதலானோர் முன்வந்து, சிங்கப்பூரை மேம்பட்ட வருங்காலத்திற்கு வழிநடத்த ஊக்குவிப்பதாக இருக்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
நாட்டுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சேவையாற்ற டாக்டர் டான் முடிவெடுத்தது சிங்கப்பூரின் அதிர்ஷ்டம் என்றார் திரு லீ.
டாக்டர் டானுடன் தாம் அணுக்கமாகப் பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், தாம் எப்போதும் அவரது கருத்துகளை மதித்ததாகக் குறிப்பிட்டார்.
வங்கித் துறையில் பணியைத் தொடர உறுதிபூண்டிருந்த டாக்டர் டானை, 1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் லீ குவான் யூ அரசியலுக்கு வரச் சம்மதிக்கவைத்தார்.
திரு லீ குவான் யூ, திரு கோ சோக் டோங், திரு லீ சியன் லூங் மூவரின் அமைச்சரவைகளிலும் டாக்டர் டான் இடம்பெற்றிருந்தார்.
தேசியக் கொள்கைகள், முடிவெடுத்தல் குறித்த தனிப்பட்ட கண்ணோட்டங்களையும் சில கடினமான முடிவுகள் குறித்த கருத்துகளையும் தமது நூலில் அவர் பகிர்ந்துள்ளார்.