உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி விரிவாக்கத் திட்டத்துக்கு கிட்டத்தட்ட 44 ஹெக்டர் அளவு நிலம் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கும் நோக்கில் முன்னர் பரிசீலிக்கப்பட்ட நிலமீட்பு அளவைவிட இது குறைவு என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் கடற்பாலத்தின் மேற்குப் பகுதியில் ஏறக்குறைய 34 ஹெக்டர் நிலம் மீட்கப்படும் என்றும் கடற்பாலத்தின் கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 10 ஹெக்டர் நிலம் மீட்கப்படும் என்று ஜூரோங் நகராண்மைக் கழகமும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்பில் ஜூரோங் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தற்போதைய அளவைவிட அதிகமான நிலமீட்புத் திட்டத்தைப் பரிசீலித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடற்பாலத்தின் மேற்குப் பகுதியில் 36.4 ஹெக்டர், கிழக்குப் பகுதியில் 30.2 ஹெக்டர் நிலமீட்பு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக கழகம் தெரிவித்தது.
பின்னர் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை குறைக்கும் நோக்கில், நிலமீட்புப் பகுதி 44 ஹெக்டர் அளவுக்கு, அதாவது 60 காற்பந்து திடல் அளவுக்கு, குறைக்கப்பட்டதாக இது தொடர்பான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட முகவைகள் பதிலளித்தன.
மேலும், இந்த குறைந்த அளவிலான நிலமீட்புத் திட்டம் மாண்டாய் சதுப்புநிலம், மட்ஃபிளேட் இயற்கை பூங்கா ஆகியவற்றுக்கும் கடற்பாலத்துக்கு மேற்கே மீட்கப்படும் நிலத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலமீட்புப் பணி 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி 2029ஆம் ஆண்டில் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்பாலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நிலமீட்புப் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் இது முடிவுற ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடற்பாலத்தின் கிழக்கில் நடைபெற உள்ள சிறிய அளவிலான நிலமீட்புப் பணி நிறைவுபெற மூன்று ஆண்டுகள், நான்கு மாதம் எடுக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.மறுமேம்பாடு கண்டபின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி 95 ஹெக்டர் நிலப்பரப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தற்போதைய 19 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சோாதனைச் சாவடியைவிட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மற்ற மேம்பாடுகள் ஒருபுறம் இருக்க, மறுமேம்பாடு காணும் சோதனைச்சாவடி உச்ச போக்குவரத்து நேரத்தில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சோதனை முடிந்து தாண்டிச் செல்லும் நேரம் தற்போதைய 60 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பாலத்தின் கிழக்குப் பகுதி நிலமீட்பு அளவைக் குறைத்தது அங்குள்ள உட்லண்ட்ஸ் நீர்முகப்பு முனையத்திலிருந்து விலகியிருக்கவும் உதவும் என்று சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தொடர்பான அறிக்கை விளக்கமளித்துள்ளது. இது உட்லண்ட்ஸ் நீர்முகப்பு முனையத்தில் மண்டிப் பகுதி உருவாவதை தடுக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.