புதிய என்எஸ் சதுக்கம் 2027ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் அது அனைத்துச் சிங்கப்பூரர்களுக்குமான தேசிய சின்னமாக விளங்கும் என்றும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
என்எஸ் சதுக்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்றது.
அதில் அமைச்சர் இங் கலந்துகொண்டு இத்தகவலை வெளியிட்டார்.
தேசிய சேவையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான இடமாகப் புதிய என்எஸ் சதுக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர மேடை, தேசிய தின அணிவகுப்புகளையும் பேரளவில் நடத்தப்படும் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு ஏதுவான அரங்கம், நீர் விளையாட்டு மையம், நீர்முகப்பு அம்சம் ஆகியவற்றை என்எஸ் சதுக்கம் கொண்டிருக்கும்.
மரினா பே மிதக்கும் மேடைக்கு மாற்றுத் தளமாக இந்தப் புதிய என்எஸ் சதுக்கம் கட்டப்படுகிறது.
2007ஆம் ஆண்டில் புதுப்பிப்புப் பணிகளுக்காக தேசிய விளையாட்டரங்கம் மூடப்பட்டபோது தற்காலிகத் தளமான மரினா பே மிதக்கும் மேடை கட்டப்பட்டது.
மரினா பே மிதக்கும் மேடையில் இதுவரை 11 தேசிய தின அணிவகுப்புகள் நடைபெற்றுள்ளன.
எதிர்காலத்தில் தேசிய தின அணிவகுப்புக்கான நிரந்தர இடமாகத் திகழ்வதுடன் என்எஸ் சதுக்கத்தில் அடிப்படை ராணுவப் பயிற்சி நிறைவு விழாக்களும் நடத்தப்படும் என்று அமைச்சர் இங் கூறினார்.
அத்துடன் தேசிய சேவை கருப்பொருளுடனான காட்சிக்கூடம் ஒன்றும் என்எஸ் சதுக்கத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.