விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நேற்று முன்தினம் மட்டும் (23.3.2024) இரண்டு இடங்களில் நிகழ்ந்துள்ளது.
முதல் சம்பவம் தீவு விரைவுச்சாலையில் பிற்பகல் வாகனம் ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இது குறித்த காணொளி ‘ரோடு எஸ்ஜி’ தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளது.
இந்தச் சம்பவம் சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. நீர்ப் பீய்ச்சி அடித்து அந்தத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கனரக வாகனம் ஒன்று தீப்பற்றிக்கொண்டதைக் காட்டும் காணொளி ‘ரோடு எஸ்ஜி’ ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீச் சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தீப்பிடிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீச்சம்பவங்களுக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.