சாலைகளில் வாகனமோட்டிகளின் நடத்தையை மேம்படுத்தும் முயற்சியாக, திங்கட்கிழமை (ஏப்ரல் 1) முதல் சிவப்பு விளக்கு கண்காணிப்புக் கருவிகளில் வேக அமலாக்க அம்சத்தைப் போக்குவரத்துக் காவல்துறை படிப்படியாகச் செயல்படுத்தும்.
இந்த அம்சம் தீவு முழுவதும் செயல்படுத்தப்படும், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் அல்லது போக்குவரத்து விதிமீறல்களுக்கு இலக்காகக்கூடிய இடங்களில் செயல்படுத்தப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023ல், வேகமாக வாகனம் ஓட்டியதன் தொடர்பில் மரணத்தை விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 83.3 விழுக்காடு அதிகரித்தது. மரணம் விளைவிக்கும் விபத்துகளை ஏற்படுத்துவதற்கான காரணிகளில் ஒன்றாக வேகமாக வாகனம் ஓட்டுவது விளங்கியது.
போக்குவரத்து அமலாக்க கண்காணிப்புக் கருவிகளால் கண்டறியப்பட்ட வேகமாக வாகனம் ஓட்டியது குறித்த விதிமீறல்களின் எண்ணிக்கை 2022ல் 73,152 சம்பவங்களில் இருந்து 28.6 விழுக்காடு குறைந்து 2023ல் 52,237ஆக இருந்தது.
இருப்பினும், காவல்துறை அமலாக்க நடவடிக்கைகளின்போது வேகம் தொடர்பான விதிமீறல்களின் எண்ணிக்கை 2022ல் 52,016 சம்பவங்களில் இருந்து 22 விழுக்காடு அதிகரித்து 2023ல் 63,468ஆகப் பதிவானது.
போக்குவரத்து அமலாக்க கண்காணிப்புக் கருவிகள் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருந்தாலும், யாரும் பார்க்கவில்லை என்று வாகனமோட்டிகள் நினைக்கும் இடங்களில் வேகமாகச் செல்வதை இது காட்டுகிறது என்று காவல்துறை தெரிவித்தது.
பிப்ரவரியில், போக்குவரத்து காவல்துறை தனது வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது. அதில் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2023ல் 136ஆக உயர்ந்தது. இது, 2022ல் ஏற்பட்ட 108 இறப்புகளிலிருந்து 25.9 விழுக்காடு அதிகம்.
உயிரிழப்புகளில், மோட்டார்சைக்கிளோட்டிகளும் மோட்டார்சைக்கிள் பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர்களும் இந்த எண்ணிக்கையில் பாதிப் பங்கு வகித்தனர். அதே நேரத்தில் வயதான பாதசாரிகள் கிட்டத்தட்ட 20 விழுக்காடு பங்கு வகித்தனர்.
சிங்கப்பூர் காவல்துறை இணையத்தளத்தில் 242 சிவப்பு விளக்கு கண்காணிப்புக் கருவி இடங்களின் பட்டியலைக் காணலாம்.