புனித வெள்ளிக்குப் பிறகு மூன்றாம் நாளான ஈஸ்டர் ஞாயிறன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.
ஒன்றிணைந்த சமூக உணர்வைப் பறைசாற்றும் விதமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் சிலேத்தார் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் கிட்டத்தட்ட 190 கிறிஸ்தவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
உற்றார் உறவினர், நண்பர்களைச் சந்தித்து பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேற ஜபம் செய்தனர்.
தேவாலயத்தின் பாதிரியார் ஜேம்ஸ் நகுலன், 55, திருச்சபை முன்னின்று பிரார்த்தனைகளை வழிநடத்தினார்.
கிறிஸ்தவர்கள் இயேசுவுக்காக ஈஸ்டர் தினப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தது முக்கிய அங்கமாக இருந்தது.
இயேசு கிறிஸ்துவின் மறைவை நினைவுகூரும் புனித வெள்ளிக்குப் பிறகு மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுதலின் சிறப்பைப் பற்றி பாதிரியார் திருச்சபைக்கு வந்தவர்களிடம் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பரிசுத்த திருவிருந்து நடைபெற்றது.
ஈஸ்டர் தினப் பிரார்த்தனையில் இரு குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு நீராட்டு சடங்கு செய்து ஞானஸ்நானம் பெற்றதும் தேவாலயத்தில் புதியவர்கள் சேர்ந்ததும் குதூகலத்தைக் கூட்டின.
“இந்த ஆண்டு ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் எங்கள் திருச்சபைக்குப் புதிதாக 11 பேரை ஏற்று, இரண்டு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்துள்ளோம். மதியத்திற்குப் பிறகு நாங்கள் கடற்கரைக்குச் சென்று மற்றொரு ஞானஸ்நானம் செய்யவுள்ளோம். ஈஸ்டர் தினம் எங்களுக்கு மிகப்பெரிய நிகழ்வு. இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னதுபோல அவர் உயிர்த்தெழுந்தார்,” என்று பாதிரியார் ஜேம்ஸ் நகுலன் குறிப்பிட்டார்.
கடந்த 40 ஆண்டுகளாக திருச்சபைக்கு வரும் இல்லத்தரசி திருமதி ஜீவசெல்வி, 63, “இந்தத் தேவாலயத்துக்கு வருபவர்களை நான் என் குடும்பமாகப் பார்க்கிறேன். சென்றாண்டு நான் நோய்வாய்ப்பட்டேன். தேவாலயத்திற்கு வந்து என் வேண்டுதலை இயேசு முன் வைக்கும்போது அவர் அந்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார்,” என்றார்.
“நாங்கள் ஆறாண்டுகளாக இந்தத் திருச்சபைக்கு வருகிறோம். இந்தியாவிலிருந்து நாங்கள் சிங்கப்பூருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு வந்தோம். இந்தத் தேவாலயம் எங்களை ஒரு குடும்பமாக ஏற்றுக்கொண்டது,” என்று பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான இல்லத்தரசி ஷீபா சேம், 34, கூறினார்.
“இயேசு உயிர்த்தெழுந்த நாளில் நாங்கள் எங்கள் மகனுக்கு ஞானஸ்நானம் செய்தோம். இயேசுவின் சித்தத்தின்படி அவரின் செய்கையைப் பின்பற்றி நடக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் தாயார் கீதா அழகுவேல், 42.