சிங்போஸ்ட்டின் சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பை திரு ஷாஹ்ரின் அப்துல் சலாம் மே 1 முதல் ஏற்கிறார். திருமதி நியோ சு யினிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்பார் என்று ஏப்ரல் 1 அன்று சிங்போஸ்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது
மூன்று ஆண்டுகளுக்குள் தளவாட நிறுவனமாக மாறும் இலக்கில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பைத் தொடர்ந்து தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுகிறது.
திருமதி நியோ சு யின் வேறு இடங்களில் தொழில் வாய்ப்புகளைத் தொடர உள்ளார்.
திரு ஷாஹ்ரின் எஸ்எம்ஆர்டி தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை நிர்வாக இயக்குநராகவும் எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷனில் மூத்த துணைத் தலைவராகவும் (உத்திபூர்வ உறவுகள்) இருந்தார்.
செயல்பாட்டு மேலாண்மை, உத்திபூர்வ திட்டமிடல், சொத்து மேலாண்மை, வணிக மேம்பாடு, பொறியியல் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஷாஹ்ரின்.
சிங்போஸ்ட் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள நியோவின் பதவிக்காலத்தில் அவரது பங்களிப்புகளுக்கு சிங்போஸ்ட் நன்றியைத் தெரிவித்தது, அவரது தலைமைத்துவத்தின் கீழ் கொவிட்-19 பரவலின்போது ஏற்பட்ட உள்நாட்டு சேவை செயல்திறன் முன்னேற்றம், மின் வணிகம் வளர்ச்சியை சிங்க்போஸ்ட் குறிப்பிட்டது.