‘கேஸ்’ எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் புதிய தலைமை இயக்குநராகத் திரு டெக்ஸ்டர் டே, ஏப்ரல் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு முதல் அந்தப் பதவியை வகித்த திருவாட்டி லீ சியாவ் ஹுவீயிடமிருந்து திரு டே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முன்னர் ‘கேஸ்’ சங்கத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றிய திரு டேக்கு, பல்வேறு பொதுச்சேவை அமைப்புகளில் பணிபுரிந்த அனுபவமுண்டு.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைப்பு, தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.
திருவாட்டி லீ தமது பதவிக்காலத்தின்போது, கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு இடையே சங்கத்தின் பயனாளர் சேவைகளைச் சீரமைக்க உதவினார்.
சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண உதவும் சமரசப் பேச்சுகளை இணையம்வழி நடத்தும் முறையை அவர் அறிமுகப்படுத்தினார். 24 மணி நேரமும் பயனீட்டாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெற உதவும் இணையத்தளத்தைத் தொடங்கினார்.
2022ல் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட என்டியுசி உறுப்பினர்கள், சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் சேவையை இலவசமாகப் பெறத் திருவாட்டி லீ உதவினார்.
இந்த ஆண்டு, ‘பிரைஸ் காக்கி சாம்பியன்ஸ்’ திட்டத்தைத் தொடங்கினார்.
அக்கம்பக்கத்தில் சிறந்த விலையில் விற்பனையாகும் பொருள்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவதோடு விலை ஒப்பீட்டுத் தளமான ‘பிரைஸ் காக்கி’ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் இத்திட்டத்தின்கீழ் 2,000 தொண்டூழியர்கள் பணியாற்றுகின்றனர்.
‘கேஸ்’ சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், திருவாட்டி லீ சியாவ் ஹுவீயின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.