குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, சட்ட உதவி பெறுவோர் சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக்கூடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தகையோரின் சிங்கப்பூர் பூல்ஸ் இணையச் சூதாட்டக் கணக்குகளும் முடக்கப்படும்.
இதுதொடர்பான புதிய விதிமுறை ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
‘புரோபோனோ எஸ்ஜி’ அமைப்பின் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெறுவோர்க்கும் ‘பிடிஓ’ எனப்படும் பிரதிவாதி அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தின் சட்ட உதவி பெறுவோர்க்கும் இது பொருந்தும்.
இத்தகைய இலவசச் சட்ட உதவி பெறுவதை நிறுத்தி இரு வாரங்கள் ஆன பிறகே அவர்கள் சூதாட்டக்கூடங்களுக்குச் செல்ல முடியும். அல்லது நீதிமன்றத்தில் அவர்கள் மீதான வழக்கு நிறைவுபெற்றிருக்க வேண்டும்.
இந்தப் புதிய விதிமுறையைக் குற்றவியல் வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.
இலவசச் சட்ட உதவி பெறுவோரின் நிதி நிலைமையைப் பாதுகாக்கப் புதிய விதிமுறை உதவும் என்று சட்ட அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
“தற்போது இலவசச் சட்ட உதவி பெறுவோரில் மிகச் சிலரே சூதாட்டக்கூடங்களுக்குச் செல்கின்றனர் அல்லது சிங்கப்பூர் பூல்சின் இணையச் சூதாட்டக் கணக்கைப் பயன்படுத்துகின்றனர்,” என்றார் அவர்.
2022 டிசம்பரில் தொடங்கப்பட்ட ‘பிடிஓ’ எனப்படும் பிரதிவாதி அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம், குற்றம் சாட்டப்பட்ட ஆனால் வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் குற்றவியல் சட்ட உதவி வழங்கும்.
சூதாட்டம், குற்றக் கும்பல்கள், பயங்கரவாதம் ஆகியவை தொடர்பான வழக்குகளில் ‘பிடிஓ’ அலுவலகத்தின் சட்ட உதவியைப் பெற இயலாது.
‘புரோபோனோ எஸ்ஜி’ அமைப்பின் இலவச சட்ட உதவித் திட்டம் வெளிநாட்டினருக்கும் சட்டவிரோதக் கடன் நடவடிக்கைகள் போன்றவை தொடர்பான வழக்குகளிலும் உதவி வழங்கும்.
இந்நிலையில், யாரும் இந்த உதவித் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்கப் புதிய விதிமுறை உதவும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய வழக்கறிஞர்கள் கூறினர்.