இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தை வரவேற்க சுல்தான் பள்ளிவாசலில் புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) காலை ஏறக்குறைய 9,000 பேர் திரண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
பள்ளிவாசலில் 2,000 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் தொழ முடியும் என்பதால் அன்பர்கள் பலர் கூடாரங்களிலும் பள்ளிவாசலுக்கு வெளியிலும் தொழுகையை மேற்கொண்டனர்.
சிங்கப்பூரில் தற்போதுள்ள 72 பள்ளிவாசல்களில் மிகப் பழைமையானவற்றில் ஒன்றான சுல்தான் பள்ளிவாசல் கட்டப்பட்டு இவ்வாண்டு 200 ஆண்டுகள் ஆகிறது.
இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள், மத்திய கிழக்கினர், வெள்ளைக்காரர்கள், கறுப்பினத்தவர்கள் என உலக சமூகத்தின் சிறிய பிரதிபலிப்பாக இந்தச் சிங்கப்பூர்ப் பள்ளிவாசல் காட்சியளித்தது.
தமிழகத்தில் திருமுல்லைவாசல் என்ற ஊரைச் சேர்ந்த, சொந்தத் தொழில் செய்து வருபவரான முகமது நிஜாமுதீன், 44, அதே ஊரைச் சேர்ந்த தம் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் சுல்தான் பள்ளிவாசலில் ஒன்றுகூடி, உறவாடி மகிழ்ந்தார்.
“நோன்பிருப்பதும் ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் ஸக்காத்து வரியை வழங்குவதும் ஏழைகளின் துன்பத்தைப் புரிந்து அவர்களுக்கு உதவக்கூடிய சமய வழக்கங்களாகும். இதனை நினைத்து நான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன்,”என்று திரு நிஜாமுதீன் கூறினார்.
ரமலான் நோன்பு நோற்றிருந்த மாதத்தில் அதிகாலை நான்கு மணி எழுந்து ‘சகர்’ உணவைத் குடும்பத்திற்காக தயாரித்த இல்லத்தரசி ரஹ்மத்து நிஷா, 35, தம் கணவர், மாமியார், மூன்று பிள்ளைகள் ஆகியோருக்கு மகிழ்ச்சியுடன் சமைத்தார்.
நோன்புக் கஞ்சி உள்ளிட்ட உணவுகளைத் தயாரிப்பது, பள்ளிவாசலைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளைக் கடந்த ஒரு மாதமாக சுல்தான் பள்ளிவாசல் நாள்தோறும் மும்முரமாக ஈடுபட்டிருந்த 250 தொண்டூழியர்கள் பெருநாள் களிப்பில் கூடி மகிழ்ந்தனர்.
இந்தப் பள்ளிவாசலில் தொண்டூழியர்களில் ஒருவரான முஹம்மது ஹாரிஸ், 49, பள்ளிவாசல் தொழுகைக்குப் பின்னர் நண்பகல் உணவுக்காக தம் வீட்டுக்குச் சக தொண்டூழியர்களை அழைத்தார்.
“சேவையிலும் ஈகையிலும் இணைந்திருந்ததை எண்ணி மகிழ்கிறோம்,” என்று அவர் சொன்னார்.
உட்லண்ட்சிலுள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் காலைத் தொழுகையில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பர் அப்துல் காதர், 33, அக்கம்பக்கத்து நண்பர்களைக் கண்டு நலம் விசாரித்தார். வீட்டில் உணவு சாப்பிட்ட பிறகு அவர் மாலை வேளையில் உறவினர்களைக் காணவிருப்பதாகக் கூறினார்.