சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூரில் வேலையிட மரணங்களும் கடுமையாகக் காயமடைந்த சம்பவங்களும் குறைந்தபோதும் உற்பத்தித் துறை நிலவரம் கவலையளிப்பதாகவே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு மார்ச் 27ஆம் தேதி வெளியிட்ட வருடாந்தர வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில், கட்டுமானம், போக்குவரத்து போன்ற துறைகளைவிட உற்பத்தித் துறையில் இத்தகைய சம்பவங்களின் கூட்டு எண்ணிக்கை அதிகம் என்று தெரியவந்தது.
உற்பத்தித் துறையின் சில நிறுவனங்கள், வேலையிடப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் செலவு கூடும் என்று கருதுவதாக, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத் தலைவர் டான் மன் ஈ, ஏப்ரல் 5ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
‘நேட்ஸ்டீல்’ நிறுவன இயக்குநரும் தலைமைச் செயலாக்க அதிகாரியுமான அவர், “அதைச் செலவாகக் கருதும் பலரும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலை வழங்கினால் அவர்கள் நிம்மதியாக உணர்வார்கள் என்பதையும் அதனால் உற்பத்தி மேம்படும் என்பதையும் உணரத் தவறிவிடுகிறார்கள்,” என்றார்.
“ஒரே ஒரு விரும்பத்தகாத சம்பவம் ஏற்பட்டாலுங்கூட அதுவரை அவர்கள் சேமித்ததெல்லாம் கரைந்துவிடும்,” என்றார் திருவாட்டி டான்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களில் வளங்கள் அல்லது தகவல் பற்றாக்குறையும் அடங்கும் என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் கூறியது.
இவ்வாண்டு அத்தகைய 5,000க்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு ‘ஸ்டார்ட்ஸேஃப்’ போன்ற வேலையிடப் பாதுகாப்பு வளங்களைப் பகிர்ந்துகொள்ள அது திட்டமிடுகிறது.
நிறுவனங்கள், வேலையிட அபாயங்களைக் கண்டறிய உதவும் இலவசத் திட்டம் ‘ஸ்டார்ட்ஸேஃப்’.
மேலும் இரு புதிய வளங்களை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மன்றம் கூறியது. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ‘ஸ்டார்ட்’ வழிகாட்டி, பொதுவான விபத்துகள் குறித்த தகவல்கள் அடங்கிய ‘எஸ்எம்இ டபிள்யூஎஸ்எச்’ தொகுப்புகள் ஆகியவை அவை.