சிங்கப்பூரும் சீன நகரமான ஷென்செனும் மின்னிலக்க வர்த்தகம், தரவுப் பகிர்வு ஆகியவை தொடர்பான இருதரப்புத் திட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்-சீனா (ஷென்சென்) அறிவார்ந்த நகரத் திட்டம் (எஸ்சிஐ) இந்த ஆண்டு அதன் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இவ்வேளையில் இருதரப்பும் இணைந்து அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுமென்று திரு ஹெங் வலியுறுத்தினார்.
ஷென்சென் நகர மேயர் சின் வெய்சோங்கை ஏப்ரல் 12ஆம் தேதி சந்தித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
துணைப் பிரதமர் ஹெங், ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்வது அவரது பயணத்தின் நோக்கம்.
ஏப்ரல் 7ஆம் தேதி முதல் சீனாவில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசிய திரு ஹெங், ஏப்ரல் 11ஆம் தேதி ஷென்சென் சென்றார்.
2019ஆம் ஆண்டு, திரு ஹெங் சீனா சென்றபோது எஸ்சிஐ திட்டம் தொடங்கப்பட்டது. மின்னிலக்கத் தொடர்பு, புத்தாக்கத்தையும் தொழில்முனைப்பையும் ஊக்குவித்தல், திறனாளர் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள்.
தமது சீனப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஏப்ரல் 12ஆம் தேதி ஹாங்காங் சென்ற துணைப் பிரதமர், ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயைச் சந்தித்தார்.
இருதரப்பு அணுக்கமான, நீண்டகால உறவுகளை மறுஉறுதிப்படுத்திய திரு ஹெங், ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்துத் திரு லீயுடன் கலந்துரையாடினார்.
வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம், ஆய்வு, மக்களுக்கு முக்கியமான விவகாரங்களுக்குத் தீர்வுகாணுதல் ஆகிய அம்சங்களில் இரு தரப்பும் கூடுதலாக ஒத்துழைக்கலாம் என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 12ஆம் தேதி பின்னேரம், தமது சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு துணைப் பிரதமர் ஹெங் சிங்கப்பூர் திரும்பினார்.