சிங்கப்பூரில் சில இடங்களில் மின் ஸ்கூட்டர் மற்றும் மின் சைக்கிள் மூலம் வேகமாக செல்வது, பந்தயங்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
அண்மையில் எஸ்ஜி ரோடு விஜிலான்டே எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் சில மின் ஸ்கூட்டர், மின் சைக்கிள்கள் மிக வேகமாகப் பந்தயங்களில் ஈடுபடுவதை ஒரு காணொளி காட்டியது.
அந்த பந்தயம் தானா மேரா கோஸ்ட் சாலை, மரினா பேவுக்கு அடுத்துள்ள பே ஈஸ்ட் கார்டனின் பூங்கா இணைப்பு பாதைகளில் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.
காணொளியின் ஒரு காட்சியில் ஆடவர் ஒருவர் ‘சூப்பர்மேன்’ போல் பறக்கும் நிலையில் மின் ஸ்கூட்டரில் வேகமாக பயணம் செய்தார்.
சில மின் ஸ்கூட்டர்களும் மின் சைக்கிள்களும் அதன் வேகத்தை மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் சட்டவிரோதமான முறையில் மாற்றி அமைத்துள்ளதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காணொளி தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தகவல் கேட்டது.
அதற்கு பதிலளித்த ஆணையம் விதிமுறைகள் மீறியதாக நம்பப்படும் இடங்களில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் மின் சைக்கிள்கள் சாலைகளிலும் சைக்கிளுக்காக அமைக்கப்பட்ட தடங்களிலும் ஓட்ட அனுமதி உண்டு. ஆனால் மின் ஸ்கூட்டர்கள் சைக்கிளுக்காக அமைக்கப்பட்ட தடங்களில் பயன்படுத்த மட்டும்தான் அனுமதி உண்டு. முக்கியமாக அவை மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.
இரண்டு மின் சாதனங்களும் நடையர்கள் பயன்படுத்தும் தடத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் அவை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும்.
சாதனங்களின் எடை 20 கிலோ கிராமுக்கு மேல் இருக்கக்கூடாது, 250 வாட் சக்தியில் தான் இயங்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளன. மின் ஸ்கூட்டர் மற்றும் மின் சைக்கிள் ஓட்டுபர்களின் வயது குறைந்தது 16 ஆக இருக்க வேண்டும்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ, 20,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால் 4 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ, 40,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.