செல்லப் பிராணிகளை அன்புடன் வளர்ப்பவர்களுக்கு அவை வெறும் விலங்குகள் அல்ல. குடும்ப உறுப்பினராகவே அவற்றை அவர்கள் கருதுகின்றனர்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது தங்கள் செல்லப் பிராணிகளையும் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை பலரிடம் மேலோங்கி இருக்கிறது.
ஆனால், செல்லப் பிராணிகளை விமானத்தில் அழைத்துச் செல்வது எளிதன்று.
அதற்குப் பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.
அவற்றைப் பூர்த்தி செய்வது மிகுந்த மனவுளைச்சலை ஏற்படுத்தும் என்று செல்லப் பிராணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தங்கள் செல்லப் பிராணிகளைத் தங்களுடன் எப்படியும் வெளிநாடுகளுக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல பலர் தயாராக உள்ளனர்.
செல்லப் பிராணிகளை வழக்கமான விமானங்களில் அழைத்துச் செல்ல பல கட்டுப்பாடுகள் இருப்பதால் சிலர் தனியார் விமானச் சேவைகளை நாடுகின்றனர்.
தனியார் விமானங்கள் மூலம் பயணம் செய்வதால் ஏற்படும் செலவு அதிகம் என்பதால் மற்ற செல்லப் பிராணி உரிமையாளர்களுடன் இணைந்து பயணம் செய்யும் முறையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
இதன்மூலம் தனியார் விமானத்துக்கான செலவை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
35 வயது தொழில்முனைவரான கிளென் சான் இரண்டு வயது நாய்க்குட்டி ஒன்றை அன்புடன் வளர்த்து வருகிறார். அதன் பெயர் விஸ்கி.
“விஸ்கியுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் அனைத்து எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் புரிந்துவைத்திருக்க வேண்டும். தனியார் விமானத்தில் பயணம் செய்யும்போது இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு பிரச்சினையாக இருக்காது. விமானப் போக்குவரத்து விதிமுறைகளை நன்கு அறிந்த குழுவுடன் நான் இணைந்து செயல்பட்டு வருவதே இதற்குக் காரணம். எனவே, எனது நாய்க்குட்டியை என்னுடன் வெளிநாடு கொண்டு செல்ல முடியும்,” என்றார் திரு சான்.
வரும் அக்டோபர் மாதத்தில் விஸ்கியுடன் ஜப்பானுக்கு எட்டு நாள் பயணம் மேற்கொள்ள திரு சான் திட்டமிட்டுள்ளார். திரு சானுடன் விஸ்கி தனியார் விமானத்தில் செல்ல இருக்கிறது. இதுவே விஸ்கியின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும். விஸ்கி, திரு சான் செல்லும் அதே தனியார் விமானத்தில் இன்னொரு சிங்கப்பூர் தம்பதியரும் பயணம் செய்ய இருக்கின்றனர். அவர்களுடன் அவர்களது நாய்க்குட்டியும் ஜப்பான் செல்ல இருக்கிறது.
இவர்களுடன் சேர்த்து வேறு சிலரும் அந்தத் தனியார் விமானத்தில் தங்கள் செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான விமானச் சேவைகளில் செல்லப் பிராணிகளுக்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. செல்லப் பிராணி, அதன் கூண்டு ஆகியவற்றின் மொத்த எடை ஐந்து கிலோ முதல் 9 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால், விஸ்கியின் எடை 9.5 கிலோ என்று திரு கிளென் தெரிவித்தார். எனவே, விஸ்கி தமக்குப் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்ய முடியாது என்றும் சரக்குகள் வைக்கப்படும் இடத்தில் அது பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
“விஸ்கி எனது உயிர் நண்பன். அது எனக்குப் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்வதே நியாயமானதாக இருக்கும். சரக்குகள் வைக்கப்படும் இடத்தில் தனியாகப் பயணம் செய்ய அது விரும்பாது,” என்றார் திரு சான்.
சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்கும் பிறகு ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்கும் ஒன்பது பேர் அமர்ந்து செல்லக்கூடிய தனியார் விமானத்தை வாடகைக்கு எடுக்க ஏறத்தாழ 200,000 அமெரிக்க டாலரிலிருந்து (S$272,000) 250,000 அமெரிக்க டாலர் வரை செலவாகும்.