2021ல் கொள்ளைநோய்க்கு எதிராக சிங்கப்பூர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் தடுப்பூசிக்கு எதிரான ‘ஹீலிங் த டிவைட்’ என்ற இயக்கத்தைத் தொடங்கிய ஐரிஸ் கோ, தடுப்பூசி நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களைத் தொந்தரவு செய்யுமாறு தமது 3,700க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு இடையூறுகளை விளைவிக்கும்படி அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இவற்றை கருத்தில்கொண்டு கோ, 48 மீது மே 9ஆம் தேதி வியாழக்கிழமை மேலும் ஐந்து புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தற்போது கோ மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவர் அமைதியாகக் காணப்பட்டார்.
கொள்ளைநோய் பரவலுக்கு மத்தியில் ‘ஹீலிங் த டிவைட்’ குழு அமைக்கப்பட்டது.
தடுப்பூசிகளின் ஆபத்துகள் குறித்து அக்குழு மக்களை எச்சரித்தது.
கோ மீதான புதிய குற்றச்சாட்டுகளில் இரண்டு, பொதுச்சேவை ஊழியர்களின் பணியில் இடையூறுகளை ஏற்படுத்த உதவியாக இருந்தது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.