லுசேல், கத்தார்: ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பின் (ஏஎஃப்சி) ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்தும் கத்தார், பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்தானை வென்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் வென்ற ஆசிய கிண்ணத்தைத் தக்க வைத்துக்கொண்டது. அதில் கத்தாரின் அக்ரம் அஃபிஃப் மூன்று பெனால்டி கோல்களைப் போட்டார்.
ஒரு மாதம் நடைபெற்ற இக்காற்பந்துத் திருவிழாவில் 24 ஆசிய அணிகள் தங்கள் திறனை வெளிப்படுத்தின. அதில், 2022 உலகக் கிண்ணத்தையும் ஏற்று நடத்திய கத்தார், தான் பங்கேற்ற மூன்று ஆட்டங்களிலும் தோல்வி கண்டு பெரும் கவலை கொண்டது. அந்த நினைவுகளை மறக்கடிக்கும் வகையில் இந்தப் போட்டியில் அது மிகச் சிறப்பாக ஆடி ஆசியாவின் காற்பந்து மன்னர்கள் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டது.
லுசேல் விளையாட்டரங்கில் 86,492 பார்வையாளர்கள் முன்னிலையில், முதல் முறையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் தோன்றும் ஜோர்தானைத் திக்குமுக்காட வைத்தது, கத்தார்.
அனைத்துலக காற்பந்துச் சம்மேளனத்தின் உலகத் தர வரிசையில் 87வது இடத்தில் ஜோர்தான் உள்ளது. கத்தார் 58வது இடத்தில் உள்ளது.
முற்பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கத்தாரின் அக்ரம் அஃபிஃப் கோலாக்கினார். பிற்பாதி ஆட்டம் தொடங்கியவுடன் ஜோர்தானின் யஸான் அல்-நைமாட் சமநிலை கோலை போட்டார். அதற்குப் பின் கத்தாருக்குக் கிடைத்த மேலும் இரண்டு பெனால்டி வாய்ப்புகளை அக்ரம் அஃபிஃப் கோலாக்கி, கோல் எண்ணிக்கையை 3-1 என்று உயர்த்தினார்.
ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டிகளின் சிறந்த ஆட்டக்காரராகவும் அக்ரம் அஃபிஃப் அறிவிக்கப்பட்டார்.
அடுத்த ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் நடைபெறும்.