தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிங்கப்பூரின் ஜூரோங் தீவு போல தமிழக தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளார்.
சென்னையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
“குவைத் நாட்டைச் சார்ந்த ‘அல் கராபி’ எனும் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.49,000 கோடி முதலீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பெட்ரோலிய பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையையும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி தொழிற்சாலையையும் தொடங்க உள்ளது.
“இதன் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ஜூராங் தீவு, குஜராத்தில் உள்ள ஜாம் நகர், தஹேஜ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப்போல தமிழகத்தின் தென்மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்,” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறோம்,” என்றார்.
“‘யாதும் ஊரே’ என்ற புதிய திட்டத்தை நானே நேரடியாகச் சென்று அமெரிக்காவில் தொடங்கி வைத்தேன். இந்தப் பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும் துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, அதன் மூலம் ரூ.8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. இதனால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
“இதுவரை ரூ.14,728 கோடி மதிப்பீட்டிலான 36 தொழில் திட்டங்களுக்கு பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 22,763 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.
“முதலீடு செய்வதை எளிதாக்கும் பிரிவு எனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் பூங்கா, மின்சார வாகன பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. செல்போன் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட புதிய நிறுவனங்கள் தற்போது ஆரம்பிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன,” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ.5,000 கோடி செலவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
டிட்கோவும் டிஎல்எஃப் நிறுவனமும் இணைந்து இந்த தொழில்நுட்ப பூங்காவை உருவாக்குகின்றன. இதன் மூலம் 70,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், டிட்கோ நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, டிஎல்எஃப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மோகித் குஜ்ரால், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீராம் கட்டார் உட்பட பலர் பங்கேற்றனர்.
#தமிழ்முரசு #தமிழ்நாடு #ஜுரோங்_சிங்கப்பூர்