சென்னை: இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 1,116 மலேசியர்களுக்காக 6 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதற்குரிய செலவை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக இந்தியா சென்ற சுமார் 1,500 மலேசிய குடிமக்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
இதையடுத்து மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரனும் மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் சரவணனும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து 6 சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக மஇகா அறிவித்தது. இதற்காக 1.05 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின்படி சென்னை, திருச்சியில் இருந்து முதற்கட்டமாக சிறப்பு விமானங்கள் மூலம் 369 பேர் கடந்த திங்கட்கிழமை மலேசியா சென்றடைந்தனர். இதையடுத்து நேற்று மேலும் 372 மலேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மிக விரைவில் மீதமுள்ளவர்களும் தாயகம் திரும்புவர் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு செல்லும் சிறப்பு விமானங்கள் காலியாக இருக்கும் என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மலேசிய விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 113 இந்திய குடிமக்களை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.