சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 நோய் இதுவரை 133 பேரை பலி வாங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை தாதியாகப் பணியாற்றி வந்த 58 வயதான ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் தேதிக்கு முன்பு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் அன்றிரவே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல் தலைமை பெண் தாதி இவராவார்.
இதற்கிடையே சென்னை அருகே உள்ள மாங்காட்டில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குழந்தையின் தாய்க்கும் நோய்த்தொற்று இருந்தது.
இதேபோல் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அண்மையில் சக ஆயுள் கைதிகள் மூவருடன் சட்டம் தொடர்பான மூன்று மாத படிப்புக்காக சென்னை புழல் சிறைக்கு சென்றுவிட்டு கடந்த 23ஆம் தேதிதான் திருச்சி திரும்பியுள்ளார்.
இதையடுத்து அக்கைதியுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.