சாத்தான்குளத்தை சேர்ந்த வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், அவ்விருவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் இருவர், ஒரு காவலர் என நால்வரை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் உள்ளிட்டோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை என்றும் சிபிசிஐடி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.