சென்னை: நாட்டில் இன்றைய நிலையில் மளமளவென்று அதிகரித்துவரும் கிருமிப் பரவல், இம்மாதக் கடைசியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சத்தைத் தொட்டு, பின்னர் கணிசமாகக் குறையத் தொடங்கும் என்று அசோகா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை கணித அறிவியல் மையத்தின் பேராசிரியர் கௌதம் ஐ மேனன் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் தொற்றானது மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதால், பாதிப்பானது உச்சத்தைத் தொட்டு தணியும் எனவும் சில மாநிலங்களில் இந்தப் பாதிப்பு அறவே ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கொரோனா பரவலின் மூன்றாம் அலை, வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் உச்சத்தைத் தொடும் என்றும் முந்தைய இரு அலைகள் போல் இல்லாமல் இந்த அலையின் பாதிப்புகள் வெகுவாகக் குறையும் என்றும் தொற்று அதிகரிக்கும் வேகத்திலேயே மீண்டும் குறையத் தொடங்கும் என்றும் சென்னை இந்திய தொழில் நுட்பக் கழக (ஐஐடிஎம்) கணிதத்துறை பேராசிரியர்கள் கணித்துள்ளனர்.