ராமநாதபுரம்: நடராஜர் சிலை உட்பட ஏழு சாமி சிலைகளை ஐந்து கோடி ரூபாய்க்கு விற்க முயன்றது தொடர்பாக நான்கு பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளரான அலெக்சாண்டர், தம்மை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி எனக்கூறிக்கொண்டு ஏழு சிலைகளை விற்க முயன்றபோது காவல்துறையிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து ஆயுதப்படை காவலர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதாகினர். ஏழு சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தச் சிலைகள் எங்கிருந்து திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவை பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது. சிலைக் கடத்தலில் ஆயுதப்படை காவலர்களுக்கு என்ன பங்கு என்பது குறித்து விசாரணை நடக்கிறது.