சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 115,000 பேருக்கு குரங்கம்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பயணிகளுக்கு நடத்தப்படும் பரிசோதனையைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
அம்மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் நோய்த்தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"சென்னையில் மட்டும் 90,504 பேருக்கு குரங்கம்மை பாதிப்பைக் கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துலக விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இதற்கிடையே, கொரோனா தொற்றுப்பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளருக்கு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த 3ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 3.13 விழுக்காடாக உள்ளது. பாதிப்பு நிலவரத்தை ஆய்வு செய்ததில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரச் செயலாளர் சுட்டிக்காட்டி உள்ளார்.