என் தாத்தா, என் தந்தை என்று வழிவழியாகத் தொடரும் இந்தத் தொழிலைக் கைவிடக்கூடாது; மேலும் மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் நுண்கலைப் பட்டப்படிப்பு படித்ததாகக் கூறுகிறார் அரும்பாக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் விக்னேஷ்.
இவரின் தந்தையான நடராஜன், 65, என்பவரை அந்தப் பகுதியில் தெரியாதவர்கள் கிடையாது. 'அரும்பாக்கம் நடராஜன்' என்றால் பொம்மைத் தொழில்தான் நினைவுக்கு வரும். அவரின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக மண் பொம்மைகள், சிலைகள் தயாரிப்புத் தொழிலைச் செய்து வருகிறது.
"கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் எங்கள் கைவண்ணம் இருக்கும்," என்கிறார் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குத் தங்கள் படைப்புகளை ஏற்றுமதி செய்யும் நடராஜன்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால் பெரும்பாலான தருவிப்பு ஆணைகளை (ஆர்டர்) தவிர்த்துவிடுகிறோம் என்று விக்னேஷ் கூறினார்.
கும்பகோணத்தில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் திருவிளையாட்டம் என்ற நகருக்கு அருகே இருக்கும் அரும்பாக்கத்தில் சாலை ஓரமாக இவர்களது வீடு இருக்கிறது.
"விநாயகர் சதூர்த்தி வரும் 31 ஆம் தேதி. நெருங்கிவிட்டது. முழுமூச்சாக ஆறு பேர் வேலை பார்க்கிறோம். பெரும்பாலும் இந்துக் கடவுள் சிலைகளை நாங்கள் உருவாக்குகிறோம்.
"விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது, படைத்துவிட்டு தண்ணீரில் விடப்படும் விநாயகர் முதல் நிரந்தரமாக வீடுகளிலும் வழிபாட்டு இடங்களிலும் வைத்து வணங்கும் உருவச் சிலைகள் வரை பலவற்றை நாங்கள் உருவாக்குகிறோம்.
"களிமண், வண்டல் மண், சவுட்டு மண் மூன்றையும் கலந்து தண்ணீரை ஊற்றிக் குழைத்து பிசைந்து பதமாக, கெட்டியாக மண்ணைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
"அதை அச்சில் நன்கு அழுத்தி பதியச் செய்து முதலில் மண்ணுக்கு வடிவம் கொடுக்கிறோம். உருவம் கிடைத்த பிறகு மண் சிலையாகி விடும். அவற்றின் மீது நேரடியாக சூரிய ஒளிபடாமல் அவற்றை பத்து நாள்கள் வீட்டுக்குள்ளேயே காய வைக்கிறோம். 11வது நாள் வெயிலில் வைத்து அடுத்த நாள் சிலைகளை அவற்றுக்கான அடுப் பில் பதமாக சுட்டு எடுக்கிறோம்.
"பிறகு அவற்றில் இருக்கக்கூடிய பிசுறுகளைத் தூரிகையைக் கொண்டு நீக்கி, சிலைகளை மக்குக் கரைசலில் மூழ்க வைத்து எடுப்போம். இந்தக் கரைசல், சிலை களில் இருக்கக்கூடிய சிறு சிறு துவாரங்கள் போன்றவற்றை அடைத்துவிடும்.
"இரண்டு முறை இப்படிச் செய்யவேண்டும். அது முடிந்ததும் சிலைகளில் மட்டி பார்ப்போம். இதனால் சிலைகள் வழவழ என்று ஆகிவிடும்.
"மட்டி காய்ந்த பிறகு முதலில் முற்றிலும் வெள்ளை வண்ணம் பூசுவோம். அது நன்கு காய்ந்ததும் பல வண்ணங்களைப் பூசும் பணி தொடங்கும்.
"வேலைப்பாட்டிற்குத் தகுந்தாற்போல் ரூ.50 (S$0.87) முதல் ரூ.5,000 (S$86.97) வரை எங்களுடைய படைப்புகள் விலைபோகின்றன. மொத்த விற்பனையும் உண்டு. சில்லறை விற்பனையும் உண்டு. இப்படி நாங்கள் தயாரிக்கும் சுவாமி சிலைகள் வழிபாட்டுக்கு நிரந்தரமாக பயன்படுத்தப்படுகின்றன," என்றார் திரு விக்னேஷ்.
இதனிடையே, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக உருவாக்கப்படும் விநாயகர் சிலை பற்றி விளக்கிய திரு நடராஜன், "எல்லாம் ஒன்றுதான். பச்சை மண்ணில் உருவாகும் சிலைகளைச் சுட்டு எடுக்க மாட்டோம். குறையில்லாமல் பார்த்து அப்படியே விற்பனைக்கு கொடுத்து விடுவோம்.
"இத்தகைய விநாயகர் சிலை களைப் பண்டிகை அன்று படைத்து விட்டு இந்துக்கள் சிலையைத் தண்ணீரில் விட்டுவிடுவார்கள். எங்கள் தொழிலை நாங்கள் மிகப் புனிதமாகக் கருதுகிறோம்.
"கடவுள் படைப்பில் குறை இருக்கலாம். அப்படி இருந்தால் கடவுளை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் எங்கள் படைப்பில் குறை இருந்தால் அது பக்தர்களின் மனதைப் புண்படுத்திவிடும் என்பதால் குறையில்லாமல் தெய்வச் சிலைகளை உருவாக்கு வதுதான் எங்கள் குறிக்கோள்," என்று திரு நடராஜன் கூறினார்.
சிலைகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்த விக்னேஷிடம் முழுமை பெற்ற ஒரு சிலையைக் காட்டுங்கள் என்று கேட்டேன். அவர் எடுத்துக்காட்டியதைப் பார்த்து வியந்தேன்.
அவை மண் சிலைகளா என்ற சந்தேகம் ஏற்பட்டது. பார்வைக்கு உலோகச் சிலைபோல், மரத்தால் ஆன சிலைபோல், கருங்கல் சிலை போல் அவை காணப்படுகின்றன.
கைத்திறனில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள் என்ற சிந்தனை மனதில் ஏற்பட அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.
இந்த அரிய தொழில் அழிந்துவிடக்கூடாதே என்ற கவலை அப்போது என் மனதில் ஏற்பட்டது.
ஆனால் திரு விக்னேஷ் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றநிம்மதியுடன் அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி நகர்ந்தேன்.