மணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பூப்படைந்து, ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, கணவரை இழந்து, அவர் பார்த்துவந்த தொழிலையே பார்க்கும் அஞ்சம்மாள், 70, பிணம் படுத்தும் பாடு தாங்க முடியாது என்கிறார்.
பிணம் முழுவதும் எரிந்து சாம்பலாக அரை நாள் பிடிக்கும். அதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். எரிந்து கொண்டு இருக்கையில் கொரக்களி இழுத்து எலும்புக்கூடு சதையுடன் நீண்டு, மடங்கி நரபுரவென மேலே கிளம்பும். ஒரு பக்கமாகப் புரளும். தடியால் அடித்து, அமுக்கி மறுபடியும் நெருப்பில் படுக்க வைக்க வேண்டும்.
செத்தும் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். செத்தும் கெடுப்பவர்கள் இருக்கிறார்கள். கெடுப்பவர்கள் பிண வடிவில் வந்து படுத்தும் பாடு தாங்கமுடியாது என்கிறார் 70 வயது அஞ்சம்மாள்.
திருவாரூர் மாவட்டம், கடுவங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த முதிய மாது, தொப்புளான் என்ற தன் கணவர் செய்து வந்த பிணம் எரிக்கும், புதைக்கும் வேலையைச் செய்தே தன் காலத்தை ஓட்டுகிறார்.
“காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட எனக்கு ஆறு வயது ஆனபோது என்னை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.
“மணமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பூப்படைந்தேன். என் கணவரின் முதல் மனைவி இங்காயிக்கு ஓர் ஆண் மகன். ராஜேந்திரன் என்ற அந்த மகனுக்கு இப்போது 40 வயது.
“இரண்டாவது மனைவியான தனத்திற்கு குழந்தை, குட்டி கிடையாது. இங்காயியும் தனமும் இப்போது உயிரோடு இல்லை.
“மூன்றாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன். நான்கு பெண்களும் மூன்று மகன்களும் மணமாகி அவரவர் ஏதோ தொழிலைப் பார்த்து வருகிறார்கள். என்கடைசி மகன் ஐயப்பன் எனக்கு உறுதுணையாக இருக்கிறான்.
“ஊரில் யாராவது மரணம் அடைந்துவிட்டால் என்னிடம் தெரிவிப்பார்கள். சாவு வீட்டிற்குச் சென்று தப்படித்தபடி இரவு முழுவதும் பாட்டுப் பாடுவேன்.
“பிணம் வீட்டிலிருந்து தகனச்சாலைக்குப் புறப்பட்டதும் கொஞ்சம் முன்னதாக தகனக் கூடத்திற்கு வந்துவிடுவேன்.
“உறவினர்கள் உடலுக்கு ஈமச்சடங்குகளைச் செய்து கொள்ளி வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். உடல் தகனக் கூடத்திற்கு வருவதற்கு முன்பாகவே தகனக்கூடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் தரையில் ஒரு கோடு போடுவோம்.
“அந்தக் கோட்டுக்கு ‘அர்ஜுனன்’ கோடு என்று பெயர். தற்கொலை செய்துகொண்டு உயிரை விடுபவர்கள், கொலைகாரர்கள் தகனக்கூடத்தில் (இதை மயானக்கோயில் என்று சொல்கிறர்கள்) இருந்து மீண்டு வீட்டுக்குச் செல்ல முயல்வார்கள்.
“ஆனால் அர்ஜுனன் கோடு அவர்களைத் தடுத்துவிடும். அந்தக் கோட்டைத் தாண்டி போகமுடியாது. ஓர் உடல் முழுவதும் எரிந்து சாம்பலாக சுமார் அரை நாள் எடுக்கும். பிணத்தை முழுவதும் எரிக்க 150 வரட்டிகள் தேவை. 200 கிலோ விறகு வேண்டும். ஐந்தாறு பெரிய வைக்கோல் கட்டுகள் வேண்டும்.
“இரவு முழுவதும் தகனக் கூடத்திற்குப் பக்கத்திலேயே படுத்துத் தூங்குவேன். பிணம் எரிந்துகொண்டு இருக்கும்போது திடீரென கொரக்களி இழுக்கும்.
“சதையுடன் எலும்பு மேலே கிளம்பும், அப்படியும் இப்படியும் புரளும். அந்த நேரத்தில் தடியால் அடித்தும் வரட்டியால் அமுக்கியும் அதைச் சிதையிலேயே தள்ள வேண்டும்.
“இதற்குள் நான் படும்பாடு அந்தச் சாமிக்குத்தான் தெரி யும். மனிதன் கொடுக்கும் தொல்லைகளைவிட பிணம் படுத்தும்பாடு பெரும்பாடாகத் தெரியும்.
“நாய், நரி, கழுகிடம் இருந்தும் உடலைக் காக்கவேண்டும்.
“முழுவதும் உடலை எரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். வரட்டி, விறகு ஈரமாக இருந்தால் இன்னும் சிரமம்.
“பாதி எரிந்து பாதி எரியாமல் போய்விட்டால் உறவினர்கள் கோபித்துக்கொண்டு பணம் கொடுக்கமாட்டார்கள்.
“பிணம் சரியாக எரியவில்லை என்றால் அது கெட்ட சகுனம் என்பது நம்பிக்கை. எப்போதுமே சிதையில் தலை தெற்கே, கால் வடக்கே இருக்கும்படி உடலை வைத்து எரிக்கவேண்டும்.
“செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் உறவினர்கள் திரும்பி வந்து பால் தெளிப்பார்கள். நல்லடக்கம் என்றால் அடுத்த நாளே பால்தெளியல் சடங்கு நடக்கும்.
“சிதையில் கிடக்கும் எலும்புக்கூட்டின் தலையில் இருந்து கால் வரை எல்லா உறுப்புகளின் எலும் புகளிலும் சிலவற்றை எடுத்து அவற்றை உறவினர்களிடம் நாங்கள் ஒப்படைக்க வேண்டும்.
“அந்த எலும்புகளை மனித வடிவில் செய்து பால் தெளித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.
“நாங்கள் செய்யும் இவ்வளவு சேவைகளுக்கும் மொத்தமாக ரூ.1,500 கூலி கொடுப்பார்கள் அவ்வளவுதான்.
“என் கணவரான தொப்புளான் 10 ஆண்டுகளுக்கு முன் 94வது வயதில் காலமானார். அவர் தன் வாழ்நாளில் 10,000க்கும் மேற்பட்ட உடல்களை எரித்து இருக்கிறார், புதைத்து இருக்கிறார்.
“என் கணவரோடு சேர்ந்தும் அவருக்குப் பிறகு என் மகனோடு சேர்ந்தும் நானும் நூற்றுக்கணக்கில் பிணங்களை எரித்து இருக்கிறேன், நல்லடக்கம் செய்து இருக்கிறேன். பரம்பரை பரம்பரையாக எங்களின் வாழ்க்கை பிணங்களோடுதான் கழிகிறது.
“என் கிராமத்தில் சுடுகாட் டிற்குப் பக்கத்தில்தான் என் குடிசை வீடும் இருக்கிறது,” என்று இவ்வளவு விவரங்களையும் கூறிய திருவாட்டி அஞ்சம்மாள், இறந்தவர்கள் வீட்டில் பாடும் பாடலை தப்படித்துக் கொண்டே பாடிக் காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட அஞ்சம்மாளின் மகன் ஐயப்பன், “எங்களுக்குப் பிறகு இவ்வேலையைச் செய்ய ஆளில்லை,” என்றார்.
“வருமானம் மிகவும் சொற்பம். இப்போதெல்லாம் சுற்றுவட்டார கிராமங்களில் மாதத்திற்கு இரண்டு, மூன்று இறுதிச் சடங்கு வேலைகள்தான் கிடைக்கின்றன. இதை வைத்துக்கொண்டு காலம் தள்ளுவது, ஒரு நாள் கழிவது ஒரு யுகம் போவதாக இருக்கிறது,” என்றார் ஐயப்பன்.
அஞ்சம்மாள், ஐயப்பன் தாய்-மகன் கதையைக் கேட்ட நான், மனித பிணம்கூட இந்தப் பாடு படுத்துமோ என்ற சிந்தனையுடன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினேன்.