சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழு வதும் ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ஒத்திகை சென்னை அருகே உள்ள பழவேற்காடு கடற்கரையில் நடைபெற்றது.
அப்போது ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு 9,300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், தனியார் சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு ஆகியவை சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடப்பட உள்ளன.
நாட்டு நலப்பணித் திட்ட தினமான எதிர்வரும் 24ஆம் தேதி பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெறும்.
ஒத்திகை நிகழ்ச்சியின்போது, விதைகளை நடவு செய்கையில், ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும், பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும், விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.