சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அக்டோபர் 4ஆம் தேதி விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அனைத்துலக, உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 1.30 மணி முதல் தகவல் சேவை பெறமுடியாமல் கணினிக் கட்டமைப்பு ஸ்தம்பித்தது.
இதனால் பயணிகளுக்கு ‘போர்டிங் பாஸ்’ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் அவற்றைக் கையால் எழுதிக் கொடுத்தனர்.
பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகக் கிளம்பியதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் எட்டு விமானங்கள் தாமதமாகச் சென்றன. மேலும், அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி போன்ற 12 இந்திய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
பிறகு தகவல் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானப் புறப்பாடு சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.