சென்னை: சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியிடம் திமுக தவிர அதிமுக, பாஜக என தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் அமைதிகாத்து வந்தார்.
இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கைகோத்துள்ளதாக சரத் குமார் திடீரென அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். “பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிப்ரவரி 28ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
“அந்தப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதால் கடந்த செவ்வாய்க் கிழமை (5.3.24) மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னைச் சந்தித்துக் கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்தது.
“அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு மக்களவைத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்தது.
“அதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். முன்னதாக, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடனும் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார் சரத்குமார்.
“அண்மையில் ஒரு பேட்டியில், “அண்ணாமலை தமிழகம் முழுவதும் சென்று பாஜகவை வளர்க்க கடுமையாக உழைத்து வருகிறார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டியிருந்தார்,” என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் புதூரில் சரத்குமாரின் குலதெய்வமான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. சரத்குமார் குடும்பத்தினரின் சொந்த செலவில் அக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் சரத் குமார், அவரது மனைவி ராதிகா உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
அந்த குடமுழுக்கு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சரத்குமார். அப்போது தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பாஜகவின் வளர்ச்சி குறித்த அளவுகோல் என்னிடம் இல்லை. அண்ணாமலை மாநிலம் முழுதும் பயணம் செய்து கடுமையாக உழைத்து கட்சியை வளர்த்து வருகிறார் என்று கூறியிருந்தார். ஆனால், அப்போது பாஜகவில் கூட்டணி சேர்வது குறித்து எதுவும் சொல்லவில்லை.
மாற்றம் வரும்போது என் தலைமையில் கூட்டணி அமையும்
இன்னொரு பேட்டியில், இன்றைக்கு பணநாயகம் உள்ளது. மக்கள் மாறுகின்ற சூழல் வரும்போது எனது தலைமையில் கூட்டணி அமையலாம் என்று கூறியிருந்தார்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஆனால், அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. அதனால் இந்த முறை பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.