ஏற்காடு: ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் பேருந்து திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு நூறடிப் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது அந்தப் பேருந்து. அதில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்தப் பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. மலைச்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், அந்தப் பேருந்து 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வழியே சென்றவர்கள் மற்றும் ஏற்காடு காவல்துறை, தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின்போது பேருந்தில் பயணித்த 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.
“பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்,” என்று ஸ்டாலின் தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோடைகாலத்தையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.